விக்கிரமராஜா கைது செய்யப்பட வேண்டும்.. இந்து வியாபாரிகள் நல சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு உள்ளது போல வணிகர் சங்கத்துக்கு தலைமை அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கவர்ச்சிகரமான பேச்சில் மயங்கிய, தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் ஏராளமாக நிதி அளித்தனர். ஆனால் அதில் முறைகேடு நடந்துள்ளதாக இந்து வியாபாரிகள் நல சங்கம் குற்றச்சாட்டி உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்படுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வணிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அவரது மகன் பிரபாகரன் திமுக சார்பில் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில், விக்கிரமராஜாவை அண்மைக் காலமாக எதிர்க்கட்சியினர் அதிக அளவில் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். இந்த சூழலில் இந்து வியாபாரிகள் நல சங்கமும் குற்றம்சாட்டி உள்ளது. வணிகர் சங்க கட்டிடத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விக்கிரமராஜா மீது அந்த அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது

இந்து வியாபாரிகள் நல சங்க மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு உள்ளது போல வணிகர் சங்கத்துக்கு தலைமை அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கவர்ச்சிகரமான பேச்சில் மயங்கிய, தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் ஏராளமாக நிதி அளித்துள்ளனர்.
அதன்படி தற்போது ரூ.40 கோடி வசூல் செய்ததாக தெரிகிறது. ஆனால் அவர் கட்டியுள்ள அலுவலக கட்டிடம் வெறும் ரூ.6 கோடிக்கு கூட மதிப்பு இல்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கி உள்ளார்கள். நிர்வாகிகளை மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், உடனடியாக பொறுப்பை விட்டு நீக்குவதாகவும் கூறுகின்றனர்.
இது பொது பணம் என்பதால், மத்திய அரசு நேரடியாக தலையிட்டு இவர் வசூல் செய்ததற்கான கணக்கு மற்றும் செலவு கணக்குகளை சரி பார்க்க வேண்டும். கையாடல் நடந்தது நிரூபிக்கப்பட்டால் விக்கிரமராஜா கைது செய்யப்பட வேண்டும். விக்கிரமராஜாவுக்கு, தமிழக அரசு உதவிகரமாக செயல்பட்டால் ஒட்டுமொத்தமான வியாபாரிகளின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும். மேலும் தமிழ்நாட்டு வியாபாரிகள் இனிமேலாவது சுயநல சங்கத்திலிருந்து விடுபட்டு பொதுநல சங்கத்தில் தங்களை இணைத்து தங்களுக்கான நல வாரியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications