கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல.. இந்துக்களுக்கு புனித நூல் இல்லை.. திருமாவளவன் பரபர பேச்சு
சென்னை: கிறிஸ்தவர்களுக்கு பைபிள், முஸ்லீம்களுக்கு குர்ஆன் இருப்பது போல இந்துக்களுக்கு புனித நூல் எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமவளவன் பரபரப்பாக பேசியிருக்கிறார்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புனித நூல் இருப்பது போல இந்துக்களுக்கு புனித நூல் இல்லை என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் பேசியதாவது:-

இந்தியாவில் மேஜர் ஆக இருக்கக் கூடிய பெரும்பான்மை மதங்கள் இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம். இந்த மதங்களுக்கு என்று தனித்தனி சட்டங்கள் இருக்கின்றன. திருமண சட்டம், வாரிசு உரிமை சட்டம், தத்தெடுப்பு சட்டம் அதேபோல கார்டியன் ஷிப் சட்டம், விவாகரத்து தொடர்பான சட்டம், பெண்களுக்கான உரிமைகள் தொடர்பான சட்டம். இந்த சட்டங்கள் முஸ்லீம்களுக்கு தனியேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கு தனியாகத்தான் இருக்க முடியும்.
ஏனெனில் ஒவ்வொரு மதங்களை சார்ந்த மக்களும், காலம் காலமாக அவர்கள் பின்பற்றிய பழக்கங்களை மரபுகளை பாதுகாத்திட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த சட்டங்கள். இதுபோல நாடாளுமன்றம் கூடி பெரும்பான்மை அடிப்படையில் மசோதா மீது விவாதம் நடத்தி சட்டம் இயற்றுவது என்பது நூறாண்டுகளுக்கு முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது.
அந்தந்த மதங்களை சார்ந்த புனித நூல்கள் என்ன சொல்கிறதோ... அவர்களின் சட்ட நூல்கள் என்ன சொல்கின்றனவோ அவற்றை பின்பற்றி அந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்களுக்கு குர்ஆன் என்ன சொல்கிறதோ அதுதான் வாழ்க்கை முறை, கலாசார முறை, திருமண முறை, விவாகரத்து முறை, சொத்துரிமை முறை, தத்தெடுத்தல் முறை, பாதுகாவல் முறை இவை எல்லாம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள முறை.
கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் வாழ்வியல் முறை. இந்துக்களுக்கு புனித நூல் கிடையாது. முஸ்லீம்களுக்கு குர்ஆன் இருக்கிறது. பகவத் கீதை மட்டும் தான் இருப்பதாக சொல்கிறார்கள். அது வைணவர்கள் பின்பற்றக்கூடியது. சைவர்கள் பின்பற்றக்கூடியது அல்ல. கிருஷ்ண பராமாத்மா சொன்னது.. அர்ஜூனனுக்கு உபதேசித்தது. ஆகவே பகவத் கீதை நாமம் போடக்கூடியவர்கள் படிக்கிற ஒரு புனித நூல்.
ஆனால் பட்டை போடுகிற திருநீறு அணிந்த சைவ மக்களுக்கு அப்படி ஒரு புனித நூல் இருப்பதாக தெரியவில்லை. இப்போது பொதுவாக இந்து என்று சொல்கிறோம். ஆனாலும் இந்து சமூகத்திற்கு ஒரு சட்டம் இருந்தது அதை மன்னர்கள் பின்பற்றி வந்தார்கள், அந்த சட்டத்தின் அடிப்படையில் தான் இந்து கலாசாரம் இங்கு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.. அந்த சட்டம் எது.. அதுதான் மனுஸ்மிருதி. அதுதான் வராணாசிரம தருமத்தை சொல்கிறது.












Click it and Unblock the Notifications