இந்துத்துவா தீவிரவாதியாம்.. கெத்தாக யூடியூப்பில் பேசியவரை கொத்தாக தூக்கிய சென்னை சைபர் கிரைம் போலீஸ்
சென்னை: பெரியார், அம்பேத்காரையும் கோட்சே கொன்றிருக்க வேண்டும் என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக இந்துத்துவா தீவிரவாதி என கூறிக் கொண்டவர் சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரே ஒரு வார்டில் மட்டும் பாஜக வென்றது. அதாவது 135 ஆவது வார்ட்டில் பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் வென்றார்.
இவர் மீது கடும் எதிர்ப்புகள் இருந்த போதிலும் தேர்தலில் போட்டியிட்டு வென்றது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் உமா ஒரு தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டிதான். அதில் கோட்சே காந்தியை சுட்டது அவரது நியாயம். அவர் ஒரு இந்து. அதனால்தான் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

கோட்சே ஆதரவாளர்
நான் கோட்சே ஆதரவாளர் என்பதில் பெருமைப்படுகிறேன் என பேசியிருந்தார். மகாத்மா காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேவின் ஆதரவாளருக்கு பாஜகவில் சீட்டா என பலர் கொந்தளித்தனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். இவரது வெற்றி குறித்து யூடியூப் சேனல் ஒன்று அண்மையில் கருத்து கேட்பு நடத்தியது.

இந்துத்துவ தீவிரவாதி
அப்போது ஈஸ்வரன் சுப்பிரமணியன் என்பவர், நான் ஒரு இந்து தீவரவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டுத் தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றிருக்க வேண்டும் என ஈஸ்வரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்வரன் சுப்பிரமணியன் மீது புகார்
இது போல் சர்ச்சைக்குரிய வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிட தலைவர் கண்ணதாசன் புகார் அளித்தார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சந்தோஷ் என்பவரும் புகார் கொடுத்தார்.

ஈஸ்வரன் சுப்பிரமணியன் அதிரடி கைது
இந்த புகாரின் பேரில் ஈஸ்வரனை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். ஈஸ்வரன் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications