சென்னை ஆவடியில் ரவுடி வெட்டிக்கொலை.. இரவில் நடந்த ஷாக் சம்பவம்! என்ன நடந்தது?
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நேற்று இரவு ரவுடி தினேஷ் என்பவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலி மைதானத்துக்கு வருமாறு அழைத்து சென்று ரவுடி தினேஷை வெட்டி படுகொலை செய்துள்ளனர். தினேஷ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 20). ரவுடியான இவருக்கு ஜொள்ளு என்ற பெயரும் உண்டு. ரவுடி தினேஷ் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவுடி தினேஷை நேற்று இரவு மர்ம கும்பல் சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தினேஷ் உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அப்பகுதி மக்கள் ஆவடி டேக்பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை. ரவுடி தினேஷ் மீது ஏற்கனவே பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் இருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications