சென்னையில் மே 5 ஆம் தேதி காலை ஹோட்டல்களுக்கு விடுமுறை
சென்னை: சென்னையில் மே 5 ஆம் தேதி காலை மட்டும் ஹோட்டல்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 ஆம் தேதி வணிகர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னையில் காலை ஒரு வேளை மட்டும் ஹோட்டல்களில் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே மே 5 ஆம் தேதி திருச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வணிகர்களின் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் சமையல் எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சிலிண்டர்கள் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் வணிக சிலிண்டர்களின் விலையும் அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது.
காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தும் நிலை உள்ளது. அவ்வாறு உயர்த்தினால் டீ, காபி முதல் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஹோட்டலில் சாப்பிடுவோருக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
இதனால் ஹோட்டலுக்கு மக்கள் செல்வதை குறைத்துக் கொண்டால் ஹோட்டல் நிர்வாகமும் பாதிக்கப்படும். இதனால் விலைவாசி குறைப்பு குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்படலாம் என தெரிகிறது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைகிறார்கள். மறுபக்கம் ஆங்காங்கே மழை, சூறைக்காற்றால் பயிர்கள் நாசமாகி அவர்கள் பயிர் வைப்பதற்காக போட்ட முதலீடு கூட கிடைக்காமல் பெருத்த நஷ்டம் ஏற்படும் நிலையும் ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications