வெங்கையா நாயுடு பேரன் திருமண விழா: உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசு தலைவர் சென்னை வருகை
சென்னை: முன்னாள் குடியரசு துணைத் தலைவரும், பாஜகவின் மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் இன்று சென்னைக்கு வருகை தரவுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கவுள்ளது. திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று (ஜனவரி 31) சென்னை வரவுள்ளாா். இந்த திருமண நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரும் பங்கேற்கவுள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து மாலையில் அமித்ஷா புறப்படுகிறார். இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், சாலை மார்க்கமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்லவுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, டெல்லி செல்லவுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரும் மாலை 4.55 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர், காது கண் கேளாதோர் முட்டுக்காட்டில் உள்ள தேசிய நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்கிறார். பின்னர், வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். மீண்டும் இரவு சென்னை விமான நிலையம் வந்து டெல்லி புறப்படவுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு தமிழக பாஜக சாா்பில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளா்களாக பாஜக மாநிலச் செயலா் வினோத் பி.செல்வம், மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ் பிரசாத் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அமித்ஷாவை வரவேற்பது தொடர்பாக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, மாநில பொறுப்பாளா்கள், மாவட்டத் தலைவரை சந்தித்து ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திற்கு அமித்ஷா கடந்த முறை வந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதால் இந்த முறை போதிய கவனம் செலுத்த வேண்டும் என்று மின்சார துறைக்கு பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வருகையையொட்டி, தமிழக பாஜக மாநிலத் தலைவரை தோ்ந்தெடுப்பது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications