கொரோனாவை கட்டுப்படுத்துமா ஓமியோபதி... ஆர்சானிக் ஆல்பம் 30 சி-ஐ பரிந்துரைக்கும் மருத்துவர்கள்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகளே மருந்து கண்டறிய முடியாமல் தடுமாறி வரும் சூழலில், இந்திய ஆயுஷ் துறையின் கீழ் வரும் சித்தா, ஓமியோபதி மருத்துவர்கள் தங்கள் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு முன் வைத்து வருகின்றனர்.
கடந்த வாரம் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தியதுடன் அவர்கள் கூறிய சில ஆலோசனைகளை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டார். கொரோனாவுக்கு உரிய அறிகுறிகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர் உகந்த மருந்து என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுரையீரல் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஓமியோபதி மருத்துவத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆர்சானிக் ஆல்பம் 30 சி-ஐ பயன்படுத்தலாம் என தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளதோடு அந்த மருந்தை பரிந்துரைக்கவும் செய்துள்ளது. கொரோனா அறிகுறிகள் எனக் கூறப்படும் சளி, வறட்டு இருமல், நுரையீரல் பிரச்சனைகளுக்கு ஓமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் 30 சி மூலம் தீர்வு கிடைக்கும் என்பது அந்த துறை சார்ந்த மருத்துவர்களின் வாதமாக உள்ளது.
இதனிடையே இது தொடர்பாக பேசிய ஓமியோபதி மருத்துவர் காயத்ரி, ''ஆர்சானிக் ஆல்பம் 30 சி மருந்தை மூன்று நாட்கள் காலை மாலை என இரண்டு வேளைகள் எடுத்துக்கொண்டால் போதும். சளி, இருமல், நுரையீரல் தொடர்பான சுவாசப்பிரச்சனைகளில் இருந்து முன்கூட்டியே தற்காத்துக்கொள்ளலாம். குறிப்பாக மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியது என்பதால் இந்த மருந்தை பரிந்துரைக்கிறோம். மேலும், ஓமியோபதியை பொறுத்தவரை எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது, இந்த மருந்தின் விலையும் ரூ.50-க்கும் குறைவானது'' எனத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், '' இந்த மருந்தை பரிந்துரைத்து தமிழக சுகாதாரத்துறைக்கு எங்கள் சங்கம் குறிப்பு அனுப்பியுள்ளது. இது தான் கொரோனாவுக்கு மருந்து என எண்ணவேண்டாம், ஆனால் வைரஸ்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் ஆர்சானிக் ஆல்பத்திற்கு உள்ளது'' எனக் கூறினார்.