தனியார் பள்ளி மாணவர்களுக்கு டிவியில் பாடம் நடத்த முடியாது...வீட்டுப்பாடங்களை குறைக்கலாம் - ஹைகோர்ட்
ஆன்லைன் வகுப்புகளால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்புகளை, வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை: மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் நேரத்தையும் வீட்டுப்பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்க வேண்டும் என பள்ளிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீட்டுப்பாடங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய - மாநில அரசுகள் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளன. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. நாள் முழுவதும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு ஆபாச இணையதளங்களை தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகள் திறக்க காட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, ஆன்லைன் வகுப்புகளை துவங்கும் முன் தமிழக அரசு எடுக்க தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கல்வி முறையால் கிராமபுற மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் இருப்பது சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது எனவும் வாதிடப்பட்டது. கிராம புறங்களிலும் நூற்றுக்கு 44 சதவிகிதம் பேரிடமும் நகரங்களில் 65 சதவிகிதம் பேரிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதால் இணையதள கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் கட்டுக்குள் கொரோனா.. அண்டை மாவட்டங்களில் அதிகரிப்பு.. கோவை, சேலத்தில் கிடுகிடு உயர்வு
நான்கு மணி நேர வகுப்புகள் நடத்தினாலும் அதன் பின் வழங்கப்படும் வீட்டு பாடங்களும் கம்ப்யூட்டர் மூலமே மாணவர்கள் பார்த்து செய்ய வேண்டியுள்ளது. எனவே அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை என தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்புகளை குறைக்க வேண்டும் எனவும் வீட்டுப்பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்க வேண்டும் என பள்ளிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்து வழக்கு விசாரணையை மீண்டும் திங்கள்கிழமை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.