ஜெயலலிதா ஆட்சியிலும் இப்படி நடந்துச்சு.. யாரும் பதவி விலக சொல்லவில்லையே.. மா சுப்பிரமணியன் டென்ஷன்
சென்னை: கடந்த 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போதும் 53 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர் என்றும் அப்போது ஜெயலலிதாவை யாரும் பதவி விலக கோரி சொல்லவில்லை என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். மேலும், குஜராத்தில் இப்படி பல முறை நடந்துள்ளது. அங்கேயும் யாரும் இதுவரை பதவி விலகவில்லை என்று அமைச்சர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாரயம் குடித்த பலருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இன்று வரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி முழுவதும் மரண ஓலங்கள் கேட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனே பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போதும் 53 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர் என்றும் அப்போது ஜெயலலிதாவை யாரும் பதவி விலக கோரி சொல்லவில்லை. என்றும் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-
கள்ளச்சாரயம் அருந்தி பெண்கள் 9 பேர், திருநங்கை ஒருவர் என மொத்தம் 168 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றிய தெரிந்ததும் உடனடியாக முதல்வர் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு போன் செய்து போதுமான மருத்துவ உதவிகளை செய்யுமாறு கூறினார். அதன்பேரில் வீடு வீடாக சென்று யாருக்கும் கண் எரிச்சல் உள்ளதா?, வயிற்று எரிச்சல் உள்ளதா? என்பதனை கேட்டு அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 48 பேர். ஒரு திருநங்கை, 3 பெண்கள் உள்பட 48 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று தலா ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி வரவழைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் இருந்த மருத்துவர்களோடு மொத்தம் 200 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அங்கு பணியில் இருந்தனர்.
நரம்பு வழியாக டிரிப்ஸ் போடுவது, எத்தனால் ஊசி செலுத்துதல், முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும், பின்னர் 4 மணி நேரத்திற்கு ஒன்று என போடப்பட்டது. படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் மருந்துகளும் போதிய அளவில் உள்ளன. ஒருசிலர் தயக்கத்தினால் ஆஸ்பத்திரிக்கு வராமல் இருந்தனர். அவர்களையும் வீடு தேடி சென்று அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு நோயாளிகள் படுத்திருக்கும் படுக்கைகளில் ஓம்பிரசோல் மருந்துகள் வைக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் நேற்று அங்கு வந்து பார்வையிட்டு சென்றது நல்ல விஷயம் தான். பொறுப்போடு செய்யும் விஷயம் வரவேற்க தக்கது. ஆனால் போகும் இடத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதாவது சொல்வார்களே, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தது.
ஏனென்றால் அந்த மருத்துவமனையில் ஓம்பிரசோல் என்ற மாத்திரை தட்டுப்பாடாக உள்ளது என்று சொல்லி சென்றிருக்கிறார். அவர் வந்து சென்ற பிறகு தான் நானும் அங்கு சென்றேன். அப்போது எடப்பாடி இப்படி சொன்னதாக என்னிடம் சொன்னார்கள். இதையடுத்து உடனடியாக இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டோம். அப்போது ஓம்பிரசோல் மாத்திரைகள் 4 கோடி 4 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
ஆனால் அவர் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் இப்படி சொல்லியிருக்கிறார். இது எதிர்க்கட்ச்சி தலைவருக்கு அழகானதா?.. என்பதை நீங்களே கூறுங்கள். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் நீதியரசர் கோகுல்தாஸின் தனி விசாரணை ஆனையத்தை அமைத்துள்ளார். யார் சொன்னதையும் எளிதில் கடந்துவிட முடியாது. குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு ஒவ்வொரு முறையிலும் 100 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த மாநில முதல்வரை யாரும் பதவி விலக கோரி சொல்லவில்லை. 2001 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட இதேமாதிரி நடந்துச்சு. அப்போது ஜெயலலிதாவை யாரும் பதவி விலக சொல்லி கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications