மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றி.. டாலருடன் நெருங்கிய கணவர்? கேரளாவில் அதிர்ச்சி.. புதிய தகவல்கள்
சென்னை: மனைவிக்கு பேய் பிடித்திருப்பதால், மாந்திரீகம் செய்து, பேயை விரட்டும் முயற்சியில் கணவர் ஈடுபட்டுள்ளார்.. இதற்கு மனைவி மறுப்பு சொன்னதால், கோபத்தின் உச்சத்தில் இருந்த கணவன் ஆத்திரத்தில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பை மனைவியின் முகத்தில் ஊற்றி கொடூரமாக தாக்கியிருக்கிறார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சத்யமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சஜீர் - ரெஜிலா.. இவர்களுக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார்.

மனைவிக்கு பேய்
சஜீருக்கும், 36 வயதான ரெஜிலாவுக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தகராறுகள் வலுத்து வந்தன. மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான சஜீர், ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக வலுவாக நம்பினார். எப்படியாவது மனைவிக்கு பேயை விரட்டிவிட வேண்டும் என்று நினைத்து, மனைவியை கண்மூடித்தனமாக தாக்கி கொண்டே இருப்பார்.
கணவன் அடித்து துன்புறுத்துவது குறித்து போலீசில் புகார் தந்து, சஜீருக்கு போலீசார் அறிவுறுத்தியபோதும், திருந்தவில்லை. ரெஜிலாவை தினந்தோறும் அடித்து கொண்டேயிருந்தார். மேலும் தனக்கு தெரிந்த மந்திரவாதிகளை சந்தித்து, பேய் ஓட்டுவது குறித்த பயிற்சியையும் கற்று வந்தார்.
மந்திரவாதி தந்த சாம்பல்
அந்தவகையில் உஸ்தாத் என்ற மந்திரவாதியை சந்தித்துவிட்டு, சில சடங்கினை செய்து, ரெஜிலாவுக்கு பேய் ஓட்ட தயாரானார் சஜீர். அப்போது ரெஜிலாவின் தலைமுடியை கலைத்துவிட்டு, உடம்பெல்லாம் சாம்பல்பூசி, மாந்திரீக கயிற்றை கையில் விட்டார். இதனால் ஆத்திரப்பட்ட ரெஜிலா, சடங்குக்கு மறுப்பு சொல்லி உள்ளார்.
மாந்திரீக பூஜைக்கு ரெஜிலா மறுத்ததால், கோபமடைந்த சஜீர், சமையலறைக்கு சென்று ஸ்டவ்வில் கொதித்து கொண்டிருந்த மீன் குழம்பை எடுத்து வந்து ரெஜிலாவின் முகத்தில் ஊற்றிவிட்டார். இதனால் ரெஜிலா அலறி துடிக்கவும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, ரெஜிலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
பிறகு இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் சஜீர் தலைமறைவாகி விட்டதால் அவரை தேடி வருகிறார்கள்.
டாலருடன் நெருங்கிய கணவர்
இதனிடையே மருத்துவமனையில் உள்ள ரெஜிலாவிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.. அதாவது 2 நாட்களுக்கு முன்பு ஆன்சல் என்ற இடத்திற்கு சென்று ஒரு சூனியக்காரர் ஒருவரை சந்தித்து, அவரிடம் பேய் ஓட்டுவது குறித்து ஆலோசனை பெற்றுள்ளார் சஜீர். பிறகு அந்த சூனியக்காரர் சஜீரிடம் சில பொருட்களை கொடுத்து கூடவே சிறிது சாம்பலையும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்
பிறகு நேற்று முன்தினம் காலையில், ரெஜிலாவை தன் முன்பு உட்கார வைத்து தலை முடியை விரித்து விடும்படி சொல்லி உள்ளார். பிறகு ரெஜிலா முகத்தில் சாம்பலை பூசிவிட்டு, சூனியக்காரர் கொடுத்த ஒரு டாலரை கழுத்தில் கட்ட முயன்றாராம்.
மீண்டும் சூனியம் செய்ய முயற்சி
அந்த டாலரை பார்த்துதான் ரெஜிலாவுக்கு கோபம் வந்துள்ளது.. மாந்திரிக சடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். இப்போது படுகாயமடைந்த ரெஜிலாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. சஜீரை பிடித்து விசாரித்தால்தான், மற்ற போலியான மந்திரவாதிகள், சூனியக்காரர்கள் குறித்து விசாரிக்க முடியும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "சஜீர் பலமுறை தன்னுடைய மனைவிக்கு பேய் பிசாசு பிடித்திருக்கிறது என்று சொல்லி சொல்லியே தாக்கி வந்துள்ளார். இது குறித்து ஏற்கெனவே ரஜிலா போலீசில் புகார் தந்திருக்கிறார்.
அப்போது சஜீரை அழைத்து எச்சரித்த போதிலும், மீண்டும் மாந்திரீகர்களை அணுகி, மனைவிக்கு சூனியம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்றனர்.












Click it and Unblock the Notifications