தேனி அரசு மருத்துவமனையில் குவிந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள்.. உறவினர்கள் தேடி எடுக்கும் அவலம்
சென்னை: தேனியில் உள்ள கே விளக்கு அரசு மருத்துவமனையின் பிணவறையில் குவிந்துள்ள கொரோனா நோயாளிகளின் உடல்களை அவர்களது உறவினர்கள் தேடி கண்டுபிடித்து எடுத்து செல்லும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் ஊரடங்கால் கொரோனா தொற்று குறைந்தாலும் உயிரிழப்புகள் இன்னும் குறையவில்லை என்பதுதான் நிதர்சனம். தினந்தோறும் 450 பேருக்கு மேல் இறக்கிறார்கள்.
இந்த நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் பிணவறையில் குவிந்துள்ள கொரோனா நோயாளிகளின் உடல்களை உறவினர்களே தேடி எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. தேனி கே விளக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியான 47 வயது ஆண் இறந்துவிட்டார்.

உறவினர்கள்
அவரது உடலை உறவினர்கள் கேட்டனர். அப்போது அவர்களை பிணவறைக்கு அழைத்து சென்ற ஊழியர்கள் அங்கு கிடக்கும் பண்டல்களில் இருந்து தேடி எடுத்துக் கொள்ளுமாறு கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதுகாப்பின்றி
நீல நிற பிளாஸ்டிக் கவர்களில் பாதுகாப்பின்றி சுற்றி வைக்கப்பட்ட உடல்களின் முகப் பகுதியை திறந்து தங்களுடைய உறவினரா என பார்த்து எடுத்துச் செல்லும் நிலையை குறித்து புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.

நோட்டீஸ்
இதுகுறித்து மருத்துவமனையின் டீன் பாலாஜி நாதன் கூறுகையில் இந்த சம்பவத்தில் ஒப்பந்த தொழிலாளர் உள்பட 3 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர் ஒருவரை பணியிடை நீக்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு அரசு அதிகாரிகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிணவறை
கோவிட் நோயாளிகளுக்கு என பிணவறையில் இரு அறைகள் உள்ளன. அவை இரண்டுமே அளவில் சிறியதாகும். கொரோனா இல்லாமல் மரணித்தவர்களின் உடல்கள், கொரோனா பாதித்து மரணித்த உடல்கள் என அந்த அறைகளில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையில் ஒரே நேரத்தில் 3 உடல்கள் மட்டுமே வைக்க முடியும். ஆனால் ஒரே இரவில் 15 உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

அரசு விதிகள்
கொரோனாவால் இறந்தவர்களை கையாள, அரசு வகுத்த விதிகளை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பின்பற்றவில்லை. இரவோடு இரவாக உடல்களை பேக் செய்துவிட்டனர். கொரோனாவால் இறந்த நோயாளிகளை வைக்கும் சிறிய பிணவறையில் ஏராளமானோரின் உடல்களை வைத்துவிட்டனர். கொரோனாவால் இறந்தோரின் உடல்களை வைக்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தவறிய அதிகாரிகள்
உண்மையை சொல்ல போனால், பிணவறை அருகே பாதுகாப்பு குறைபாடு இருந்தது. இது விதிகளுக்கு எதிரானது. ஒரே ஒரு உறவினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், அவருடன் பிணவறையின் ஊழியர் வருவார். அவர்தான் சடலங்களை திறந்து அந்த உறவினருக்கு காண்பிப்பார். இதுதான் முறை. ஆனால் இதை எங்கள் மருத்துவமனையின் ஊழியர்கள் பின்பற்ற தவறிவிட்டார்கள் என்றார் டீன்.












Click it and Unblock the Notifications