ஆண்டுக்கு 1,40,000 மின்சார கார்கள்! - இந்தியாவை ஆட்டிப்படைக்கப் போகும் ஓசூர் ‘இவி’ ஹப்
சென்னை: தமிழகத்தின் வடமேற்குப் பகுதிகளை மின்சார வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளின் மையமாக உருவாக்கத் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக, தமிழ்நாடு அரசு ஒரு மெகா உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்புக்குத் தயாராகி வருகிறது.
இந்தச் சந்திப்பு வரும் 2024 ஜனவரி மாதம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அரசு அதிகாரிகள் மிகப் பரபரப்பாகச் செய்துவருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள பிரிஸ்டீஜ் பெலிகான் டவரில் இம்மாநாட்டை நடத்துவதற்காக அரசுத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான நோக்கம் என்ன? சில அரசு அதிகாரிகளை விசாரித்தோம். அவர்கள், ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் வடமேற்குப் பகுதியை மின்சார வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளில் மையமாக மாற்றுவதே இதன் இலக்கு என்றார்கள். இம்மாநாட்டின் நோக்கம் அதுவாகவே இருக்கும் என்றார்கள் அவர்கள்.
தமிழ்நாடு அரசு முன்னதாகவே ஏறக்குறைய 43,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் அளவுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
இதற்காக சுமார் 233,000 கோடி மதிப்பிலான முதலீடுகளைக் கொண்டு வரக்கூடிய மின்சார வாகன உற்பத்தி (EV) தொடர்பான பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு, மின்சார வானகத் தயாரிப்பில் வரும் காலங்களில் றெக்கை கட்டிப் பறக்க இருக்கிறது என்றார்கள் நம்மிடம் பேசிய சில அதிகாரிகள்.

குறிப்பாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள போச்சம்பள்ளியில் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான SoftBank ஆதரவுடன் Ola Electric Mobility நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதைச் சிலர் முன்னதாகவே அறிந்திருக்கலாம்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், " 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிலோவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு 7,614 கோடி ரூபாய்" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான குறிப்பில், "இதில் ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) நிறுவனம் 5,114 கோடி ரூபாயும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளன.
இதன்மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற்பூங்காவில் நிறுவப்பட உள்ளது.
இதன்மூலம் 1.40 லட்சம் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்திக்கும், 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது" என விளக்கப்பட்டும் இருந்தது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் பின் தங்கிய நகரங்களாக இதுவரை இருந்துவந்த கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி போன்ற நகரங்கள் வரும் காலங்களில் இந்தியாவில் மிகப்பெரிய தொழிற்சாலை நகரங்களாக மாற உள்ளன.

வளர்ச்சி அடிப்படையில் பின் தங்கிய இப்பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்களின் வாழ்வாதாரம், இனி பல மடங்கு உயர உள்ளது. மேலும் தேசிய அளவில் உற்பத்தி சார்ந்து இந்நகரம் சிறப்பான பங்களிப்பைச் செலுத்த உள்ளது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் (FADA), ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் ஆகிய அமைப்புகள் பகிர்ந்துள்ள பிப்ரவரி மாதத்திற்கான தரவுகளின்படி, முதல் மூன்று நிறுவனங்களான ஓலா எலக்ட்ரிக் , டிவிஎஸ் மோட்டார், ஏதர் எலக்ட்ரிக் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் அமைய உள்ளன.
அதாவது ஓசூரில் இரண்டு ஆலைகள் வருகின்றன. போச்சம்பள்ளியில் ஒரு தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த முதல் மூன்றையும் தாண்டி கூடுதலாக, அசோக் லேலண்ட் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி உட்படக் குறைந்தது 5 ஆலைகள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேறு சில நிறுவனங்கள் முன்பே உற்பத்தியைத் தொடங்கிவிட்டன.
இது குறித்து ஓலா நிறுவனர் மற்றும் சிஇஓ பவிஷ் அகர்வால் அவரது ஒரு ட்விட்டர் பதிவில், இதற்கான ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கையெழுத்தாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்

ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் காரை அகர்வாலின் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது. இது ஒரு முக்கியமாகத் தகவல்.
இந்த மொத்த முதலீட்டில் சுமார் ரூ.5,114 கோடி செல் உற்பத்தி ஆலைக்கும், மீதமுள்ள ரூ.2,500 கோடி நான்கு சக்கர வாகன உற்பத்திக்கும் செலவிடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1,40,000 மின்சார நான்கு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளனர்.
2024 ஆம் ஆண்டிற்குள் வாகனங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் காரின் விலை 50,000 டாலருக்கும் குறைவாக இருக்கும் என்று அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
ஓசூரில் உள்ள நிறுவனத்தின் தற்போதைய வசதி உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி ஆலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு புதிய மின்சார வாகனக் கொள்கையைக் கொண்டு வந்த சில நாள்களிலேயே இந்நிறுவனம் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடிவுசெய்திருக்கிறது..

இது குறித்து சில விளக்கங்களை அளித்துள்ள வழிகாட்டுதல் தமிழ்நாடு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு, "ஏற்கனவே தமிழ்நாடு ஆட்டோ மொபைல் தயாரிப்பு துறையில் மையப்பகுதியாக விளங்குகிறது.
அரசின் சமீபத்திய மின்சார வாகன கொள்கையின் (இவி) மூலம் நாட்டின் மின்சார வாகன உற்பத்தியின் தலைநகராக முன்னேறி வருகிறோம். எங்கள் கொள்கை அசலான உபகரண உற்பத்தியாளர்களை, உதிரிப்பாக உற்பத்தியாளர் களை, மின்கல உள்கட்டமைப்பை வளர்ப்பதுடன் கூடுதலாக வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது" என்கிறார் .

இச்செய்தி பற்றிய தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் அவர், "அரசின் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய நகரங்களைத் தொழிற்பேட்டையாக ஆக்க திட்டம் வகுத்துள்ளது.
அதன் பலன்கள் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. சென்னை ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் இருப்பதால், தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியை இப்போது மின்சார வாகன உற்பத்திகளுக்கான, இந்தியாவின் மிகப்பெரிய மையமாக உருக்கி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications