சென்னை ரயில்களில் துப்பட்டாவை வீசி நகைகளை அபேஸ் செய்த அக்கா- தங்கை.. கொத்தாக தூக்கிய மாம்பலம் போலீஸ்
சென்னை: சென்னையில் ஓடும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் பெட்டிகளில் ஏறி பெண் பயணிகளை குறி வைத்து நகைகளை திருடி வந்த ஓசூரை சேர்ந்த அக்கா - தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர். ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி துப்பட்டாவால் நகையை மறைத்து அபேஸ் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
ரயில் பயணிகளிடம் நூதன முறையில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஜன்னலோரம் அமர்ந்து இருக்கும் பயணிகளிடம் செல்போன் பறிக்கப்படுவது.. ரயிலில் படிக்கட்டில் இருந்து செல்போன் பேசுபவர்களிடம் அடித்து செல்போன் பறிப்பது என அடிக்கடி குற்ற செயல்கள் நடைபெறுகின்றன.

மின்சார ரயில்களில் திருட்டு: அதேபோல ஓடும் ரயிலுக்குள் கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு, சக பயணி போல வண்டிக்குள் ஏறி திருடும் கும்பலும் அவ்வப்போது போலீசிடம் சிக்கி வருகிறது. அந்த வகையில் தான் சென்னை மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் பயணிகளிடம் நூதன வகையில் நகை திருடிய அக்கா, தங்கை இருவரை போலீசார் கை செய்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதிலும் புறநகர் ரயில்களில் பீக் நேரங்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். செங்கல்பட்டு, பொத்தேரி, ஊரப்பாகம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சிட்டிக்குள் வருவது என்றால் ரயிலில் வருவதே சிறந்த வழி.
ஓசூர் சகோதரிகள்: இதனால், இந்த வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். அதேபோல சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்திலும் பயணிகள் கூட்டத்தை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. இத்தகைய கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அந்த வகையில் தான் தற்போது ஓசூரை சேர்ந்த ரேகா, கண்மணி என்ற இரு இளம்பெண்கள் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்கள்.
துப்பட்டாவால் மறைத்து: கூட்டம் அதிகமாக இருக்கும் ரயிலில் ஏறும் போது தங்கள் துப்பட்டாவை வைத்து மறைத்து, பயணிகள் கழுத்தில் உள்ள நகைகளை திருடி வந்துள்ளனர். நீண்ட நாட்களாக இப்படி திருடி வந்த சகோதரிகளை சென்னை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 4 வழக்குகளில் தொடர்புடைய 12 கிராம் தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பயணிகளுக்கு எச்சரிக்கை: கைதான சகோதரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், தஞ்சையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த மன்னை விரைவு ரயிலில் பெண் பயணிக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பயணியின் பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருவாரூர் மாவட்டம் பூமிகா (வயது 23) என்ற இளம்பெண் சிக்கினார்.
அடுத்தடுத்து ரயில்களில் நடைபெறும் நூதன திருட்டு சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பயணத்தின் போது அறிமுகம் ஆகும் முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ரயில்வே போலீசார் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications