ஹோட்டல் பில்லில் 5% ஜிஎஸ்டி ஓகே.. ஆனா இந்த எக்ஸ்ட்ரா அமொண்ட் கட்டாயமா? சர்வீஸ் சார்ஜ்? கவனம்
சென்னை: ஹோட்டல் பில்லில் வரும் சர்வீஸ் சார்ஜ் விதிகள் பற்றி பலருக்கும் இன்னும் தெளிவு இல்லை.. சாப்பாடு முடிந்து பில் வந்ததும், அதிலுள்ள கூடுதல் கட்டணங்கள் கணக்கை குழப்புகிறது.. குறிப்பாக "Service Charge" என்ற பெயரில் சேரும் தொகை கட்டாயமா என்ற கேள்வி தான் இப்போது அதிகம் எழுகிறது.. இதன் அர்த்தம் என்ன? அதிக கட்டணம் வந்தால் என்ன செய்யலாம்? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு முடித்த பிறகு வரும் பில்லைப் பார்த்தால் பலருக்கும் தலைசுற்றும்... சாப்பிட்ட சாப்பாட்டின் விலையை விட வரி, இதர கட்டணங்கள் என்ற பெயரில் கூடுதல் தொகை சேர்க்கப்பட்டிருக்கும்.

சர்வீஸ் சார்ஜ் கட்டாயமா
அதிலும் "சர்வீஸ் சார்ஜ்" (Service Charge) என்ற பெயரில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வசூலிப்பது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது.. ஆனால் இது கட்டாயமா? இல்லையா? நாம இதை கொடுக்கணுமா வேண்டாமா? என்பது பற்றி பலருக்கும் தெரிவதில்லை..
இங்கே ஒரு முக்கிய விஷயத்தை நாம் புரிந்து கொள்ளணும்.. ஜிஎஸ்டி (GST) மற்றும் சர்வீஸ் சார்ஜ் போன்றவற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி - எக்ஸ்ட்ரா பில்
ஜிஎஸ்டி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செல்லும் வரியாகும்.. ஏசி வசதி கொண்ட உணவகங்களில் உணவின் விலையில் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்க சட்டப்படி அனுமதி உண்டு. இது அரசுக்கு செல்லும் வரி என்பதால் இதை நாம் தவிர்க்க முடியாது.
ஆனால் சர்வீஸ் சார்ஜ் என்பது முற்றிலும் வேறுபட்டது. இது ஹோட்டல் நிர்வாகம் தங்களின் சேவைக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கூடுதல் கட்டணம். இது சேர்க்கப்படலாம், ஆனால் அதை கட்டாயமாக வசூலிக்க முடியாது - வாடிக்கையாளருக்கு அதை மறுக்கும் உரிமை உண்டு..
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
அதனால்தான், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) இது தொடர்பாக மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. எந்தவொரு ஹோட்டலும் அல்லது உணவகமும் கஸ்டமர்களின் அனுமதியின்றி தானாகவே பில்லில் சர்வீஸ் சார்ஜை சேர்த்து கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது.
ஒரு நபர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும்போது அங்கு வழங்கப்படும் சேவை அவருக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அவர் தனது விருப்பத்தின் பேரில் டிப்ஸ் வழங்கலாம். சாப்பாட்டின் விலையிலேயே சேவை மற்றும் வசதிகளுக்கான செலவுகள் ஏற்கனவே அடங்கியிருக்கும் என்பது பொதுவான நடைமுறை..
ஆனால் பல பெரிய ஹோட்டல்களில் பில் போடும்போதே சர்வீஸ் சார்ஜையும் சேர்த்து விடுகிறார்கள். கேட்டால் இது மேனேஜ்மென்ட் ரூல்ஸ் என்கிறார்கள்.
எனினும், இது சட்டப்படி தவறான நடைமுறை. ஒருவேளை நீங்கள் சென்ற ஹோட்டலில் பில்லில் இந்தத் தொகை சேர்க்கப்பட்டிருந்தால் நீங்கள் அதை நீக்கச் சொல்லி கேட்கலாம். சர்வீஸ் சார்ஜ் என்பது ஒரு தனிநபரின் விருப்பத்தை பொறுத்தது. உணவகத்தின் சேவை திருப்திகரமாக இல்லை என்று நீங்கள் கருதினால் அந்தத் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை..
அறிவிப்பு பலகைகள்
அதுமட்டுமல்ல, உணவகங்கள் இது குறித்துத் தெளிவான அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும் என்பதும் விதிமுறை. ஒருவேளை ஹோட்டல் நிர்வாகம் சர்வீஸ் சார்ஜ் கட்டியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள், நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம். தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் 1915 என்ற எண்ணை அழைத்து உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
அல்லது ஆன்லைன் மூலமாகவும் முறையிடலாம். உங்களின் பணத்தைச் சரியாகச் செலவிடவும் தேவையற்ற கூடுதல் கட்டணங்களில் இருந்து தப்பிக்கவும் பில்லை இருமுறை சரிபார்த்தாலே போதும்..
இனிமேல் ஓட்டலில் சாப்பிட செல்லும்போது பில்லை வாங்கியதும் அதில் 'Service Charge' என்ற வார்த்தை இருக்கிறதா என்று பாருங்கள். அது இருந்தால் உடனடியாக ஹோட்டல் மேனேஜரிடம் பேசி அதை உடனடியாக நீக்க சொல்லுங்கள். அரசு நிர்ணயித்த ஜிஎஸ்டி வரியைத் தவிர தேவையற்ற கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது நுகர்வோர் விதிமுறைக்கு எதிரானது என்பதை தெரிந்துக்கிட்டாலே இப்படிப்பட்ட செலவுகளைத் தவிர்க்க முடியும்..!!!












Click it and Unblock the Notifications