உதயநிதி வாரிசா? அமித்ஷா மகன் பிசிசிஐ செயலாளரானது எப்படி? முதுகை பாருங்க - பாஜகவை மடக்கிய ஜவாஹிருல்லா
சென்னை: அமித்ஷா இல்லை என்றால் அவரது மகன் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளராக ஆகியிருக்க முடியாது என்றும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி பெற்றது குறித்து விமர்சிக்க பாஜகவிற்கு தகுதி இல்லை எனவும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்து உள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாநில துணை பொதுச்செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டு உறுப்பினருமான எம்.யாக்கூப் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, மளிகைப் பொருள் தொகுப்பு ஆகியவற்றை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வழங்கினார்.
மாண்டஸ் புயல்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவஹிருல்லா, மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார். மாண்டஸ் புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதால் மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்
தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, "விளையாட்டு துறையில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியையும், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மிக மிக குறைவாக நிதி ஒதுக்கீடு செய்வது பாரபட்சத்தை காட்டி இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு
ஆனாலும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு வீரர்களை முதன்மை பெற செய்வார். திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றது பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த கட்சிக்கும் எள் அளவு கூட உரிமை கிடையாது. ஒவ்வொரு கட்சியிலும் மகன், மகள், வாரிசுகள் பதவி வகிக்கிறார்கள்.
அமித்ஷா மகன் ஜெய்ஷா
குறிப்பாக இதுகுறித்து விமர்சனம் செய்வதற்கு பா.ஜ.கவுக்கு துளியும் உரிமை கிடையாது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா, பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனாக இல்லாமல் இருந்தால் இந்த பதவியை வகிக்க முடியுமா? எனவே ஒவ்வொரு கட்சியும் தங்கள் முதுகுக்கு பின்னால் உள்ளதை பார்த்து பேசவேண்டும்." என்றார்.
பரிந்துரைத்த ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சராக்க வேண்டும் என்ற திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆளுநருக்கு அதை பரிந்துரை செய்தார்.
பதவியேற்ற உதயநிதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்ற நிலையில், 14 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் பதவிப் பிரமானமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்தி வைத்தார்.