கிங் மேக்கர் ஆகும் ஜெகன் மோகன் ரெட்டி? பாஜகவும், மோடியும் இவரை ரொம்ப நம்புறாங்களாமே? ஏன்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தேர்தலுக்கு பின் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எந்த தேசிய கட்சிக்கு ஆதரவு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திர பிரதேச லோக்சபா தேர்தல் இந்த முறை பல விதமாக திருப்பங்களை சந்தித்து உள்ளது. மோடியை சீட்டில் இருந்தே அகற்றுவேன் என்று 2019ல் கூறி நாடு முழுக்க அலைந்து திரிந்து கூட்டணி வைக்க படாதபாடு பட்டவர் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு.

இப்போது இருக்கும் இந்திய கூட்டணிக்கு 2019லேயே இவர் விதை போட்டுவிட்டார். 2019ல் அவர் தந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஐடியா அப்போது தோல்வி அடைந்தாலும் இப்போது கூட்டணி ஒரு வகையில் செட்டாகிவிட்டது. ஆனால் இந்த இந்தியா கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இல்லை. மோடியை கடுமையாக எதிர்த்த அதே சந்திரபாபு நாயுடு இப்போது இருப்பது பாஜக கூட்டணியில் உள்ளார்.
பாஜக ஆந்திர பிரதேசத்தில் பிரம்மாண்ட கூட்டணியை வைத்துள்ளது. சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் + பாஜக + பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. தெலுங்கு தேசம் 17, பாஜக 6, ஜனா சேனா 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் அங்கே அதே இந்திய கூட்டணியை சிபிஐ, சிபிஎம் உடன் தொடர்கிறது. இங்கே ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி காங்கிரஸை வழி நடத்துகிறார் . எதிரே ஆந்திர முதல்வர் ஒய்ஏஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி கூட்டணி இன்றி 25 இடங்களிலும் போட்டியிடுகிறார்.
கிங் மேக்கர்: இந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தேர்தல் ரிப்போர்ட்கள் வர தொடங்கி உள்ளன. பாஜகவிற்கு 200- 220 இடங்கள் வரும். என்டிஏவிற்கு 250வரை மட்டுமே வரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்க எதிரணி கூட்டணியான இந்திய கூட்டணிக்கும் 220 வரை மட்டுமே வரலாம் என்றும் ரிப்போர்டுகள் வருகின்றன. அதாவது பாஜக எதிர்பார்த்த 370 - 400 இடங்கள் வர வாய்ப்பு இல்லை. பாஜக தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன.
இப்படி இருக்கத்தான் 2024 லோக்சபா தேர்தலில் தேர்தலுக்கு பின் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எந்த தேசிய கட்சிக்கு ஆதரவு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யாருடன் கூட்டணி வைப்பார்: கடந்த லோக்சபா தேர்தலில் ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி 25 இடங்களில் 23 இடங்களில் வென்றார். அப்படி இருக்க இந்த முறையும் கூட ஜெகன் இரட்டை இலக்கங்களை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.
அப்படி இருக்க ஜெகன் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தேர்தலுக்கு பின் சந்திர பாபு நாயுடுவுடன் ஜெகன் கூட்டணியை முறிக்க வேண்டி இருக்கும். அதுவே காங்கிரஸ் உடன் ஜெகன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருந்தாலும் சகோதரி சர்மிளா உடன் ஜெகனுக்கு கடுமையான மோதல், கருத்து வேறுபாடு உள்ளது.
எதிரி சந்திராபாபு இருக்கும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா.. சண்டைக்கார சகோதரி சர்மிளா இருக்கும் காங்கிரஸ் உடன் சேர்வதா என்ற இக்கட்டான நிலை ஜெகனுக்கு இருக்கும். நாடாளுமன்றத்தில் தொங்கு சபை உருவாகும் பட்சத்தில்.. ஜெகன் மோகன் ரெட்டியும் 20+ இடங்களை வெல்லும் பட்சத்தில்.. அவர் யார் பக்கம் சாய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications