2001-இல் வெறும் 4 பேர்.. 2021-இல் அதே 4 பேர்.. 15 ஆண்டு கழித்து இது எப்படி சாத்தியம்?
சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபைக்குள் நுழைந்த பாஜக தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் 4 பேருடன் சட்டசபைக்குள் நுழைகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு முடிவுகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது. விரைவில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க போகிறார்.
இந்த தேர்தலில் மற்ற கட்சிகளின் வெற்றியை காட்டிலும் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட விஷயம் பாஜக. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது.
2 தொகுதியில் இடைத்தேர்தலா? .சட்டசபை தேர்தலில் வென்ற 2 அதிமுக 'எம்பிக்கள்'.. என்ன முடிவெடுப்பார்கள்?
4 தொகுதிகள்
இந்த 20 தொகுதிகளில் 4 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 4 இடங்களில் வென்றுள்ளது எப்படி என பரவலாக பேசப்படுகிறது.
மக்களவை
இதன் மூலம் இக்கட்சி சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்குள் பாஜக செல்கிறது. 1999ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தமிழக தேர்தலை சந்தித்தது.
2006 சட்டசபை தேர்தல்
அப்போது 21 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. அதில் காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூர், தளி ஆகிய 4 இடங்களில் பாஜக வென்றது. இந்தத் தேர்தல் வெற்றிக்கு பிறகு 2006 சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.
பொன்னார்
இதையடுத்து 2014 இல் நாகர்கோவிலிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் வென்றார். 2019 -ஆம் ஆண்டு பாஜக சார்பில் ஒரு தமிழக எம்பி கூட நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் அதே தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸின் எச் வசந்தகுமாரிடம் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
கொரோனா
இதையடுத்து 2020ஆம் ஆண்டு கொரோனாவால் எச் வசந்தகுமார் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு ஏப்ரல் 6-இல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பாஜக சார்பில் பொன்னாரும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்தும் களத்தில் இறங்கினர். இதில் விஜய் வசந்த் வென்றார்.
புறக்கணிப்பு
தமிழகத்தில் பாஜகவை மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் கடந்த 2001 இல் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் அன்றைய தினம் 4 பேர் சட்டசபைக்கு சென்றனர். அதுபோல் 15 ஆண்டுகள் கழித்து இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மீண்டும் 4 பேர் சட்டசபைக்கு செல்கிறார்கள். மாநில கட்சியுடன் இணைந்து பாஜக சவாரி செய்யும் போக்கு மற்ற மாநிலங்களில் நடந்து வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் நடந்துள்ளது.