ஒரு மாதமாக காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர முடியும்? கோர்ட்டில் காரசார வாதம்
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பதற்கு எதிராக அதிமுகவின் ஜெயவர்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி கைது ஆனது அவர் நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். முன்னதாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அறிவுறுத்தலுக்கு ஏற்ப உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையே தான் சென்னை உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பதை எதிர்த்து அதிமுகவின் ஜெயவர்தன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் என்பதால் எந்த சட்டப்பிரிவில் தகுதியிழப்புக்கு ஆளாகிறார்? என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பியது.
அப்போது, ஒரு மாதத்திற்கு மேல் நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவர் எப்படி அமைச்சராக தொடர முடியும் என்று வாதிட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசு பதில் வாதத்தை முன்வைப்பதற்காக வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications