ஸ்டாலின் "பிரதமர்" ஆவார்னு யாருங்க சொன்னது.. சல்லிக்காசு கிடையாது.. ஜெயக்குமாருக்கு வந்துச்சே கோபம்
ஸ்டாலின் பிரதமர் ஆவார் என்பது வேடிக்கையாக உள்ளது என்றார் ஜெயக்குமார்
சென்னை: யாருங்க சொன்னது ஸ்டாலின் பிரதமர் ஆவார் என்று? இவங்களே சொல்லிக்கிறதுதான் எல்லாம்" என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தங்கம், வெள்ளி
ஆகஸ்ட் 10ம் தேதி, வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தபோது, ரொக்கப்பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்தாக சொல்லப்பட்டன. நேற்றைய தினமும் மீண்டும் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது... 59 இடங்களில் அந்த சோதனை நடந்தது.. இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படி கைப்பற்றப்பட்ட பொருள்களின் விவரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரபூர்வமாகவே ஒரு அறிவிப்பையும் அறிவித்திருந்தது.

ஹார்டு டிஸ்க்குகள்
இதைதவிர, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்களும், சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், வேலுமணி வீட்டில் சல்லிக்காசு கூட கிடைக்கவில்லை என்று ஜெயக்குமார் ஒரே போடாக போட்டுள்ளார்.

கையெழுத்து
திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இன்று, 2வது முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார் ஜெயக்குமார்.. அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, முன்னாள் எம்பி குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.. பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சல்லிக்காசு கூட பிடிபடவில்லை...

திமுகவின் பொய்
ஆனால், 11 கிலோ தங்கம் பிடிபட்டதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் பிரசாரத்தை திமுகவினர் செய்கின்றனர்... அதிமுகவினரை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டினாலும் அஞ்சமாட்டோம்.. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள என்னை பேட்டி தரக்கூடாது என்று கோர்ட் சொல்லவில்லை...

பெஸ்ட் ஜோக்
என் வாயை மட்டுமல்ல, ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் வாயையும் மூட முடியாது... இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்று யாருங்க சொன்னது.. ஐநா சொல்லுச்சா? இவங்களே இவங்களுக்கு மகுடம் சூட்டிக்கொள்கிறார்கள்.. ஸ்டாலின் இந்த இந்தியாவின் பிரதமராவார் என்பதுதான் இந்த வருஷத்தின் பெஸ்ட் ஜோக்" என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications