3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல மதுபான விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தததில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர், மணிப்பூரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பணியாளர்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் தான் மேற்கூரை இடிந்து விழுந்தது எப்படி என்பது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஷாக் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷேக்மேட் ‛பப்' எனும் கேளிக்கை மதுபான விடுதி உள்ளது. நேற்று வழக்கம்போல் கேளிக்கை மதுபான விடுதி செயல்பட்டது. இரவு 7 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் ‛பப்' மேற்கூரை இடிந்து விழுந்தது. அதாவது முதல் தளத்தில் உள்ள மேற்கூரையின் ஒருபகுதி திடீரென்று பெயர்ந்து விழுந்தது.

இதில் கேளிக்கை விடுதியில் பணியாற்றி வந்த தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ஒருவர் மற்றும் மணிப்பூரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பேர் இடிபாடுகளுக்கு சிக்கி உயிரிழந்தனர்.
இறந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மேற்கூரை இடிந்து விழுந்த மதுபான விடுதியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுபான விடுதியில் 7.15 மணிக்கு போலீசாரின் அவசர எண்ணான 100க்கு போன் கால் வந்தது. மதுபான விடுதியின் மேற்கூரை கீழே விழுந்துள்ளதாக கூறினார்கள். துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 48) என்ற நபரும், மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (22) மற்றும் லில்லி (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். முன்னதாக கமாண்டோ படை, மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர். காவல்துறை கலால்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மதுபான விடுதியில் கான்கிரீட் மாதிரியான 10க்கு 10 அடி அளவுள்ள மேற்கூரை திடீரென்று கீழே விழுந்துள்ளது. அதனடியில் தான் 3 பேரும் சிக்கி இறந்துள்ளனர். காவல்துறை, தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்'' என்றார்.
இதையடுத்து ‛மெட்ரோ பணி காரணமாக விபத்து நடந்ததா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதாகிருஷ்ணன், ‛‛சென்னையில் அனைத்து இடங்களிலும் மெட்ரோ பணி நடந்து வருகிறது. ஆணையர் என்ற முறையில் முன்கூட்டியே இப்படி இருக்கலாம். அப்படி இருக்கலாம் என்று கூறுவது தவறுதலாக இருக்கும். விசாரணைக்கு பிறகு தான் விபத்துக்கான காரணம் தெரியவரும். ஆனால் உண்மை என்னவென்றால் 2 ஆயிரம் சதுரஅடி கொண்ட மதுபான விடுதியில் 10க்கு 10 அடியிலான மேற்கூரை மட்டும்தான் சேதமாகி உள்ளது. பிற இடங்கள் அப்படியே தான் உள்ளது.
முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மதுபான விடுதிக்கு சீல் வைக்க உத்ரவிடப்பட்டுள்ளது. கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்த விசாரிக்கப்பட உள்ளது. இந்த மதுபான விடுதி உரிமம் பெற்று தான் இயங்கி வருகிறது. மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்படும்'' என்றார். இதற்கிடையே இந்த விபத்தில் இறந்த சைக்ளோன் ராஜ் என்பவருக்கு திருச்சி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரை சேர்ந்த 2 பேரின் குடும்பத்தினர் குறித்து போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications