தற்கொலை செய்திகளையே விரும்பாத சித்ரா தற்கொலை செய்து கொள்வாரா?.. நண்பர்கள் சந்தேகம்
சென்னை: தற்கொலை செய்து கொள்பவரையே வெறுக்கும் சித்ரா எப்படி தற்கொலை செய்திருப்பார் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்புகிறார்கள்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருபவர் விஜே சித்ரா. மக்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக தனது பணியை தொடர்ந்த சித்ரா, நேற்று வரை சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஈவிபி பிலிம்சிட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சித்ரா கடந்த 4 நாட்களாக பூந்தமல்லி ஹைரோடில் உள்ள நசரத்பேட்டையில் ஒரு ஹோட்டலில் தனது கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்தார்.

அதிகாலை
இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அதிகாலை 2 மணிக்கு வந்த அவர் அறையில் ஹேம்நாத்தை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் அச்சமடைந்த ஹேம்நாத் ஹோட்டல் ஊழியரை அழைத்தார்.

அரசு மருத்துவமனை
பின்னர் மாற்றுச் சாவி மூலம் அறையை திறந்து பார்த்த போது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்துகிடந்தார். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் இவரது இறப்பை அவரது நண்பர்கள் ஏற்க முடியாமல் குமுறுகிறார்கள்.

வருங்காலம்
இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில் சித்ரா தற்கொலை செய்து கொள்ள சாத்தியமே இல்லை. தனது வேலை மீது ஈடுபாடும் காதலும் கொண்டவர். எத்தனை பணி பளு இருந்தாலும் முகத்தில் அதை காட்டிக் கொள்ள மாட்டார். சித்ராவுக்கு வருங்காலம் குறித்த கனவுகள் நிறைய இருந்தது.

எப்படி தற்கொலை செய்து கொள்வார்?
தனது திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்திற்கு வருமானம் போய் சேர வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே யோசித்து பல வேலைகளில் இறங்கினார். யாராவது தற்கொலை செய்து கொண்டாலே அதை விரும்பாத சித்ரா, என்ன இது இப்படி யாராவது செய்வார்களா, என அந்த முடிவுகளையே விரும்பாதவர் எப்படி தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications