சிலிண்டர் என்னவோ 6 தான்.. ரொக்கமும் ரூ. 1500தான்.. ஆனால் எம்புட்டு பணம் தேவை தெரியுமா?.. ஆத்தாடி!
சென்னை: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் 1500 ரூபாய், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என அதிமுக அறிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு ரூ 47,400.6 கோடி நிதி தேவைப்படுகிறது. இத்தனை கோடி நிதிக்கு அதிமுக அரசு என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேர்தல் வந்தாலும் வந்தது கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு கலர் கலராக அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அவ்வாறு அறிவிக்கும் போது அதற்கான நிதியை எப்படி சமாளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் இருவரும் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

ரூ 1500 உதவித் தொகை
அதில் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ 1500 உதவித் தொகை அளிக்கப்படும். ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையை அறிவித்தது. அறிவிப்பெல்லாம் சரி. ஆனால் இதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தெரியுமா.

நிதி எவ்வளவு
அதுகுறித்து பார்ப்போம். தமிழகத்தில் 2.06 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதத்திற்கு 1500 ரூபாய் என்றால் 3090 கோடியாகும். இதே ஆண்டுக்கு ரூ 37080 கோடி தேவைப்படும். அது போல் மானியமுடன் கூடிய சிலிண்டரின் விலை நேற்றைய நிலவரப்படி ரூ 835 ஆகும். 6 இலவச சிலிண்டர்கள் என்றால் ஒரு ஆண்டுக்கு ரூ 5010 நிதி தேவைப்படும்.

47 ஆயிரம் கோடி ரூபாய்
இதே 2.06 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் வழங்க சுமார் 10320 கோடி ரூபாய் நிதி தேவைப்படும். ஆக மேற்கண்ட இரு திட்டங்களையும் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ 47400 கோடி ரூபாய் நிதி தேவைப்படும். இவை அல்லாது ரேஷன் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், பொங்கல் காலத்தில் பரிசுத் தொகை என சேர்த்தால் பல்லாயிரம் கோடி நிதி என்பது தேவைப்படும்.

கடன் சுமை
இது ஒரு புறமிருக்க, தமிழக அரசின் கடன் சுமை நடப்பு நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்து 502 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் வரும் நிதியாண்டில் அதாவது 2022 மார்ச் 31ம் நாள் நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் அளவு ரூ.5,70,189.29 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். கடனே பல லட்சம் கோடியாக இருக்கும் நிலையில் அதிமுக நேற்று அறிவித்த திட்டங்களுக்கு நிதியை எப்படி பெறும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications