தவறு.. வெளியே வாங்க! சுதாரித்த ஸ்டாலின்.. ரவி உரைக்கு எதிராக அந்த நொடியே தீர்மானம் தயாரானது எப்படி?
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி உரை முடிந்து 1 மணி நேரத்திற்குள் ஆளுநரின் உரைக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இந்த தீர்மானம் தயாரானது எப்படி என்று கோட்டை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.
ஆளுநர் ஆர். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது.

எப்படி தயாரானது?
முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரை முடிந்து 1 மணி நேரத்திற்குள் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். இந்த தீர்மானம் உடனே தயாரானது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீர்மானம் அன்று காலையோ, முதல் நாளோ தயாராகவில்லை. ஆளுநர் பேசிக்கொண்டு இருந்த போதுதான் தயாராகி இருக்கிறதாம். முதல்வர் ஸ்டாலினுடன் இருக்கும் சீனியர் ஆலோசகர்கள், அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், சீனியர் அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர்கள்தான் இந்த தீர்மானம் உடனுக்குடன் எழுதப்பட காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது ஆளுநர் பேசும் ரியல் டைமிலேயே தீர்மானத்தை எழுதி உள்ளனர்.

சீனியர்கள்
அங்கு ஆளுநர் பேசும்போது அவரின் உரை எம்எல்ஏக்கள் முன்னிலையில் உள்ள டேப்லெட்டில் தெரியும். இதில்தான் அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆளுநர் 65வது பத்தியை படிக்கவில்லை என்பதை கண்டுபிடித்து உள்ளனர். இதையடுத்து உடனே முதல்வர் ஸ்டாலின் - துரைமுருகன் இருவரும் வெளியே சென்று சிறிய மீட்டிங் ஒன்றை அவசரமாக நடத்தி உள்ளனர். அதாவது வெளியே சென்று 2-3 நிமிடங்கள் பேசி உள்ளனர். சட்டசபை விதிகளை கரைத்து குடித்த அதிகாரிகள் சிலரும் நின்று உள்ளனர். ஆளுநர் உரையை நீக்க என்ன செய்த வேண்டும் என்று ஆலோசனை செய்துள்ளனர்.

ஆலோசனை
சட்டசபை விதி எண் 17ஐ தளர்த்த வேண்டும் என்று இதில் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டசபை விதி எண் 17 என்ன சொல்கிறது என்றால் ஆளுநர் உரை நிகழ்த்தும் முன்பும், பின்பும், உரை நிகழ்த்தும் போதும் அவரின் செயலுக்கு இடையூறு இருக்க கூடாது. அவருக்கு இடையூறாக செயல்பட கூடாது. அவர் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை அவரின் செயலுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று விதி சொல்கிறது. இந்த விதி சபாநாயகருக்கும் பொருந்தும், முதல்வருக்கும் பொருந்தும். இதைத்தான் தளர்த்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் விதியை தளர்த்த முடிவு செய்துள்ளனர்.

விதி எண்
இதையடுத்து உடனே அதிகாரிகள் தீர்மானத்தை எழுதி உள்ளனர். மிக பாதுகாப்பான வார்த்தைகளை பயன்படுத்தி, நேர்த்தியாக, சட்ட சிக்கல்களை ஏற்படுத்தாத தீர்மானத்தை எழுதி உள்ளனர். அந்த தீர்மானத்தில், ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால் நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம்.

என்ன இருந்தது
ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல - அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை முன் மொழிந்தார். நேற்று ஆளுனர் வாசித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு 11.31 வரை வாசித்தார். ஆளுநர் உரையை முடித்த போது நேரம் 10.48. இந்த முக்கால் மணி நேரத்தில்தான் முதல்வர் ஸ்டாலினின் அந்த தீர்மானம் எழுதப்பட்டு இருக்கிறது. அதன்பின்தான் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் வாசித்தார். இந்த தீர்மானத்தை முதல்வர் படிக்கும் போது ஆளுநர் முதலில் ஏதோ முதல்வர் வாசிக்கிறார் என்றுதான் நினைத்தார்.

ஆளுநர் வெளியேற்றம்
ஆனால் அதன்பின் எடப்பாடி எழுந்து போனதும் எதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு தனது செயலாளரிடம் விளக்கம் கேட்டார். இதை கேட்டதும் கோபம் அடைந்த ஆளுநர்.. அதன்பின் தனது பாதுகாப்பு போலீஸ் அதிகாரியிடம் வெளியே செல்ல வாகனத்தை ரெடி செய்யும்படி கூறினார். போலீஸ் அதிகாரியிடம் ஆளுநர் இப்படி கூறிய அடுத்த 10 நொடிகளில் ஆளுநர் அங்கிருந்து வெளியேறி வேக வேகமாக நடக்க தொடங்கினார். பொதுவாக ஆளுநர் உள்ளே வரும் போது வெளியில் செல்லும் போதும் அவையில் இருப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும். ஆனால் நேற்று சில திமுக அமைச்சர்கள்.. ஆளுநருக்கு எதிராக எழுந்து நிற்காமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆளுநர் விதிகளை மீறி.. தேசிய கீதம் வாசிக்கும் முன் வெளியேறிய நிலையில்தான் திமுக எம்எல்ஏக்களும் நாங்களும் மரபுகளை மதிக்க தேவையில்லை என்று ஆளுநருக்காக எழுந்து நிற்காமல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications