இப்படி ஒருத்தர் தேவைதானே.. "மாஜியை" சமாதானம் செய்த எடப்பாடி.. சரவணனை அதிமுகவிற்கு தூக்கியது எப்படி?
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் சுட சுட கிடைத்து உள்ளன.
பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன், இன்று எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டார். எல்லையில் மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையம் சென்ற சரவணன், விமான நிலையத்துக்கு வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து பேசிய விவகாரங்கள் சர்ச்சையானது.
முக்கியமாக பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவத்திற்கு சரவணன்தான் காரணம் என்று கூறப்பட்டது.

பிடிஆர்
இதனையடுத்து, பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்புக் கேட்ட சரவணன், பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவிலிருந்து விலகியதை அடுத்து, அண்ணாமலை மீது கடுமையான புகார்களை வைத்தார். ராணுவ வீரரின் மரணத்தை அரசியலாக்கியதே அண்ணாமலைதான் என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அப்போதே இது தொடர்பாக ஆடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுகவில் இணைவதற்காகவே பகீரத முயற்சி எடுத்தார் சரவணன். அப்போதே இவர் திமுகவில் இணைவார் என்று செய்திகள் வந்தன.

திமுக சரவணன்
திமுகவில் இணைய போவதாக சரவணனும் சூசகமாக சொன்னார். ஆனால் சில திமுக நிர்வாகிகள் இவர் இப்போது திமுகவில் இணைய வேண்டாம் என்று அட்வைஸ் சொன்னதாக தெரிகிறது. இதற்காக திமுக டாப் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார். தன்னுடைய வீட்டில் நடந்தஹ் திருமண விழா ஒன்றிற்கும் திமுகவினரை இவர் அழைத்து இருந்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், சரவணனை திமுகவுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என விரும்பினார்.

மதுரை மாவட்டம்
அதே சமயம் மதுரை மாவட்ட மந்திரி மூர்த்தி, மா.செ.தளபதி உள்பட மதுரை திமுகவில் பிடிஆருக்கு எதிரான அரசியல் சூடாகவே இருந்து வருகிறது. இவர்களை மீறி அமைச்சரால் பெரிதாக அரசியல் செய்யமுடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், சரவணனை திமுகவுக்குள் இழுத்து வந்து தனது எதிர்பாளர்களுக்கு செக் வைக்க விரும்பினார் பிடிஆர். ஆனால், அவரது முயற்சி பலனளிக்கவில்லை. காரணம், அமைச்சரின் நோக்கமும் அரசியலையும் அறிந்த அமைச்சர் மூர்த்தி, மா.செ. தளபதி ஆகீயோர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சரவணனை சேர்க்கக் கூடாது ; அவர் உள்ளே வந்தால் மதுரை திமுகவில் தினம் தினம் பிரச்சனை தான் வரும் என்றெல்லாம் போட்டுக் கொடுத்தார்கள். இதில் உடன்பட்ட ஸ்டாலினும், சரவணனை சேர்க்க மறுத்து விட்டார்.

மூர்த்தி
இந்த நிலையில்தான், அதிமுகவில் இணைந்துள்ளார் சரவணன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை வேட்பாளராக சரவணனுக்கு வாய்ப்பளிக்க எடப்பாடி ஒப்புக் கொண்டு விட்டார். தவிர, கட்சி நிதியாக குறிப்பிட்ட நிதி தருவதற்கும் ஒப்புக்கொண்டிருக்கிறார் சரவணன். இந்த டீலிங்கின் பின்னணியில் தான் அதிமுகவில் சேர எடப்பாடி சம்மதித்துள்ளாராம். இதற்கிடையே, மதுரையில் அதிமுகவில் கோலோச்சும், முன்னாள் அமைச்சரும் எடப்பாடிக்கு நெருக்கமானவருமான ஆர்.பி. உதயக்குமாருக்கு சரவணனை அதிமுகவில் இணைக்க விருப்பமில்லையாம்.

எடப்பாடி உதயகுமார்
ஆனால், எடப்பாடிதான் உதயக்குமாரை சம்மதிக்க வைத்தார் என்றும் அதிமுகவில் சொல்லப்படுகிறது. குறிப்பாக, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை திமுகதான் போட்டியிடும் என தெரிகிறது. அப்படி திமுக போட்டியிட்டால் திமுகவுக்கு இணையாக தேர்தல் செலவு செய்யக்கூடிய அளவுக்கும், திமுகவினரின் தேர்தல் வேலைக்கு ஈடுகொடுப்பதற்குமான ஆள் நம் கட்சியில் உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் ? ஆனால், நீங்கள் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் நீங்கள் போட்டியிட தேவையில்லை. அதனால் சரவணன் மாதிரி ஆட்கள் நமக்குத் தேவைதானே? என்று சொல்லியே உதயக்குமாரை சம்மதிக்க வைத்தாராம் எடப்பாடி என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications