தனியறை.. டாக்டரின் தீவிர கண்காணிப்பு.. புழல் சிறை மருத்துவமனையில் எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர் எப்படி உள்ளார்?, அவருக்கு வழங்கப்பட்டுள்ள தனியறை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் சென்னை, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கினார்.

இதுகுறித்து அமலாக்கத்துறையினர் அதிரடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து கடந்த மாதம் 14ம் தேதி சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே அவர் நெஞ்சுவலிப்பதாக கூறிய நிலையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதயத்தில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 21ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை முடிவடைந்ததை தொடர்ந்து அவர் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் கைது செல்லும். மேலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருப்பதாக உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது.
இதையடுத்து வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதோடு செந்தில் பாலாஜியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் புழல் சிறைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார்.
புழல் சிறையில் மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டு இருந்தாலும் கூட தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனை தனியறையில் தான் இருக்கிறார். இந்த அறையின் அருகே மருத்துவர் அறையும் உள்ளது. இங்கு ஏசி வசதி உள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதாலும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் டாக்டர் இருக்கும் அறையின் அருகே தனியறையில் அவர் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது செந்தில் பாலாஜியை டாக்டர் நவீன் என்பவர் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய சூழலில் டாக்டர்கள் பரிந்துரையின்போில் அவருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்கள் இந்த அறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அதன்பிறகு விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு அறைக்கு மாற்றம் செய்யப்படுவார். இந்த முதல் வகுப்பு தனியறையில் அசைவத்துடன் கூடிய சிறப்பு உணவுகள், தனி படுக்கை, தனி கழிவறை மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications