இயக்குநர் அமீர் + ஜாபர் சாதிக் .. இருவருக்கும் பழக்கமானது எப்படி? குற்றப்பத்திரிகையில் முக்கிய தகவல்
சென்னை: போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்பான வழக்கில் இயக்குநர் அமீரிடம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில் தான் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் இடையே இருவருக்கும் இடையேயான உறவு பற்றிய விபரம் பற்றி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் குடோனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவது தெரியவந்தது.

அதாவது போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் என்ற பொருள் தான் குடோனில் இருந்து ஏற்றுமதியாவது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த குடோன் சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை போதை்ப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிரமாக தேடி ராஜஸ்தான் மாநிலத்தில் மார்ச் மாதத்தில் கைது செய்தனர். ஜாபர் சாதிக் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த நிலையில் கைது நடவடிக்கையால் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.
மேலும் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதானந்தம் கைது செய்யப்பட்டார். இதனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 5 ஆக அதிகரித்தது. அதோடு ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு சம்மன் அனுப்பி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில் திரைப்பட இயக்குநர் அமீரும் ஒருவர்.
இயக்குநர் அமீர் இயக்கிய 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான். அந்த அடிப்படையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கடந்த மாதம் 2ம் தேதி அமீர் ஆஜரானார். அவரிடம் 11 மணிநேரம் வரை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் நடிகர் அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர் கூறிய தகவல் பற்றிய விபரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜாபர் சாதிக் உள்பட கைதான 5 பேர் மீதும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக் எப்படி இயக்குநர் அமீருக்கு பழக்கமானார்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2014ல் முகமது முஸ்தபா என்பவர் மூலம் ஜாபர் சாதிக்குடன் பழக்கம் ஏற்பட்டதாக அமீர் தெரிவித்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அமீரின் ‛இறைவன் மிகப்பெரியவன்' படத்தை ஜாபர் சாதிக் தயாரித்தார். அவருடன் இணைந்து ஒரு புரோடக்சன் நிறுவனம் தொடங்கியதாகவும் அமீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வழக்கு தொடர்பாக வங்கி கணக்குகள், தயவியல் துறை ஆவணங்கள் என மொத்தம் 97 ஆவணங்கள் குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டன. வழக்கில் 42 பேர் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications