Constitution Bill: அரசமைப்பு மசோதா நிறைவேற எத்தனை எம்பிக்களின் ஆதரவு தேவை? கட்சிவாரியாக பலம் என்ன?
டெல்லி: நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்த மசோதா நிறைவேற எத்தனை எம்பிக்களின் ஆதரவு தேவை, மொத்த மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை கட்சி வாரியாக எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகளிர் இடஒதுக்கீடு , தொகுதி மறுவரையறை, யூனியன் பிரதேச மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் குறித்து மக்களவையில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும், அதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.

அவையில் பேசிய ரிஜிஜு, "இந்த விவாதம் 12 மணி நேரம் நடைபெறும். விவாத நேரத்தை நீட்டிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளிக்கையில், தேவைப்பட்டால் விவாதம் இன்னும் கூடுதல் நேரம் நீடிக்கும் என்று கூறினார். அவர் கூறுகையில், "இந்த மூன்று மசோதாக்கள் மீதான விவாதம் 15 முதல் 18 மணி நேரம் வரை நடைபெறும். மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் அரசியலமைப்பு திருத்தச் சட்டம், தொகுதி மறுவரையறை சட்டம் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்த ஆலோசனைகள் தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். அதே சமயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2026-ஐ முன்மொழிந்தார்.
இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தியதற்கு காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்ற முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விதி 72-ன் கீழ் தங்கள் வாதங்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், முழுமையான விவாதத்தின் போது எதிர்க்கட்சியினர் தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கப் போதிய நேரம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
வேணுகோபாலின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இது மசோதாக்களை அறிமுகப்படுத்துவது குறித்த தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான நேரம் மட்டுமே, ஆனால் அவர் (வேணுகோபால்) மசோதாக்களின் தகுதிகள் (merits) குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்" என்றார்.
இந்த மசோதாக்களுக்கு பகுதிவாரியாக வாக்கெடுப்பு நடந்தது. அதில் 436 பேர் வாக்களித்தனர். அதில் மகளிர் மசோதாவுக்கு 251 பேர் ஆதரவும், 185 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இதில் 333 பேர் பட்டனை அழுத்தி வாக்களித்தனர். மேலும் அதில் குழப்பமேற்பட்டதால் வாக்குச் சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற 3ல் 2 பங்கு ஆதரவு தேவை. அந்த வகையில் 543 உறுப்பினர்களில் தற்போது 540 பேரில் 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
மக்களவையில் பாஜகவுக்கு 240, காங்தகிரஸ் கட்சிக்கு 98, சமாஜ்வாதிக்கு 37, திரிணமூலுக்கு 28, திமுகவுக்கு 22, தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12, சிவசேனா (உத்தவ்)- 9, சரத்பவாரின் என்சிபி- 8, பிற கட்சிகள் 70 என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.













Click it and Unblock the Notifications