சென்னைக்கு அதிகம்.. அடுத்து கோவை.. ஆன்லைனில் கட்டிட அனுமதி பெற எந்த ஊருக்கு எவ்வளவு?
சென்னை: தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று மூலம் கட்டிட அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த ஜூலை 22ம் தேதி அன்று சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி, தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சதுர அடிக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை நேற்று வெளியிட்டது.. அதன்படி, சதுர அடிக்கு ரூ,15 முதல் ரூ,100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் தரநிலைக்கு ஏற்ப இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் வளர்ச்சி கட்டணம், கட்டிட லைசென்சு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி, சாலை சேதம் சீரமைப்பு கட்டணம் என அனைத்தும் அடங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பட்ஜெட் அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடி வரை கட்டப்படும் கட்டுமானத்துக்கு சுய சான்று அடிப்படையில், ஒற்றை சாளர முறையில், இணையவழி கட்டிட அனுமதி பெறுவதற்கு, செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இணையவழி கட்டிட ஒப்புதலுக்கு ஒரு சதுரடிக்கு ரூ.100 வீதம், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 ஒருங்கிணைந்த கட்டணமாக நிர்ணயிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்துள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குநர், அனைத்து மாநகராட்சிகளையும் 5 நிலையாகவும், நகராட்சிகளை 4 நிலைகளாகவும் வகைப்படுத்தி, ஒவ்வொரு நிலைக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை பரிந்துரை செய்துள்ளார்.
பேரூராட்சிகளின் இயக்குநர் பேரூராட்சிகளுக்கு 4 நிலைகளுக்கும் ஒரே கட்டணத்தை பரிந்துரை செய்துள்ளார்.நகர்ப்புற உள்ளாட்சிகள் இந்த கட்டணங்களை நிர்ணயிப்பதில் இருந்து தளர்வு செய்யலாம். ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட பரிசீலனை கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை வசூலிப்பதில் இருந்து விலக்களிக்கலாம். சுயசான்று மூலம் கட்டிட உரிமம் பெற்ற பிறகு காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், கண்டறியப்படும் விதிமீறல்கள் மீது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கலாம்.
குடியிருப்பு கட்டுமானம் 325 சதுர மீட்டர் அதாவது 3500 சதுரடிக்கு மேல் இருந்தால் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டண விகிதங்களை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட பரிந்துரைகள் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில், 3500 சதுரடி (325 சதுர மீட்டர்) வரையிலான குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு ஒரு சதுரடிக்கு ரூ.100, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மற்ற கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்பட 20 மாநகராட்சிகளில் 3 சிறப்பு நிலை 'ஏ' மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.88, சதுரமீட்டருக்கு ரூ.950-ம், 3 சிறப்பு நிலை 'பி' மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.84, சதுர மீட்டருக்கு ரூ.900-ம், தேர்வு நிலை மாநகராட்சிகள் 5-ல், சதுரடிக்கு ரூ.79, சதுர மீட்டருக்கு ரூ.850-ம், நிலை 1 மற்றும் 2 என்ற வகையில் 9 மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.74, சதுர மீட்டருக்கு ரூ.800-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நகராட்சிகளில், 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.74, சதுரமீட்டருக்கு ரூ.800-ம், நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.70, சதுர மீட்டருக்கு ரூ.750-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை, 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.70, சதுர மீட்டருக்கு ரூ.750-ம், 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.65, சதுர மீட்டருக்கு ரூ.700-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.55, சதுர மீட்டருக்கு ரூ.590-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.45 மற்றும் சதுரமீட்டருக்கு ரூ.485-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
உள்ளாட்சிகளை பொறுத்தவரை: தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.27 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.290-ம், இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.25, சதுர மீட்டருக்கு ரூ.269, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.22 மற்றும் சதுரமீட்டருக்கு ரூ.237, இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.15 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.162-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications