ரன்யா கைதை விடுங்க! வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்க நகைகள் எடுத்து வரலாம்? சுங்க விதிகள் இதுதான்
சென்னை: துபாயில் இருந்து தங்கம் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ் சிக்கியுள்ள நிலையில், சுங்க விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் எவ்வளவு தங்க நகைகளை சுங்க கட்டணம் இன்றி எடுத்து வர முடியும் என்றும், இதுதொடர்பாக சுங்க விதிகள் சொல்வது என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் பிடிபட்டுள்ளார். ஒரே ஆண்டில், 40 முறை துபாய்க்கு சென்றுள்ள நடிகை ரன்யா வரும் போது எல்லாம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில், ரூ.4¾ கோடி நகைகள், பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்
பெங்களூர் லாவல்லி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகை ரன்யா ராவ், கர்நாடக காவல்துறையில் டிஜிபி ரேங்கில் உள்ள போலீஸ் அதிகாரி ராமசந்திராவின் வளர்ப்பு மகள் ஆவார். ரன்யா ராவ் கடத்தலில் ஈடுபட்ட விதம் ஒட்டு மொத்த நாட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுங்க விதிகளின்படி, வெளிநாட்டில் இருந்து பயணிகள் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம். உள்நாடுகளில் விமானத்தில் பயணிக்கும் போது எவ்வளவு தங்க நகைகள் எடுத்து செல்லலாம் என்ற விதிமுறைள் குறித்த சந்தேகம் பலருக்கும் எழத்தொடங்கியுள்ளது. இது குறித்து இங்கே விவரமாக பார்க்கலாம்.
ரெட் சேனல், கிரீன் சேனல்
இந்திய சுங்க விதிகள் 1962 சட்டம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. சுங்கத்துறையை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம் கண்காணிக்கிறது. இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு பயணியும் கஸ்டம்ஸ்கள் அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே நுழைய முடியும். பயணிகளுக்கு வர இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று கிரீன் சேனல். இதில், வரி விதிக்க கூடிய அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் இல்லாத பயணிகள் போக முடியும்.
மற்றொன்று ரெட் சேனல் என்று சொல்லப்படுகிறது. இது வரி விதிக்கப்படக்கூடிய அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கும் பயணிகளுக்கான வழியாகும். ஓராண்டுக்கும் மேல் வெளிநாட்டில் வசித்து இருக்க கூடிய இந்திய பயணிகள், 20 கிராம் தங்கம் எடுத்து வர அனுமதி உண்டு. ரூ.50,000 என்ற மதிப்புக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு வரி எதுவும் கிடையாது. ஆண் பயணி என்றால் இந்த விதிமுறை.
பெண் பயணிகளுக்கு எவ்வளவு
இதே பெண் பயணி என்றால் 40 கிராம் தங்கம் அல்லது ரூ.1.00,000- மதிப்புக்கு மிகாத அளவுக்கு கொண்டு வர அனுமதி உள்ளது. இந்திய வம்சாவளி நபர் அல்லது இந்தியாவுக்கு வர உரிய விசா வைத்து இருக்கும் பயணிகள் 6 மாத இடைவெளிக்குள் வராமல் அதற்கு மேல் வருபவர்களுக்கும் இது பொருந்தும். இவர்களை தவிர வேறு எந்த பயணிக்கும் தங்கள் உடமைகளில் தங்கம் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது. நகையாக இருந்தால் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. தங்க கட்டிகள், தங்க காசுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும். இந்திய அரசு வகுத்துள்ள இந்த வரையறைகளை தாண்டி இருந்தால் சுங்கக்கட்டணம் கட்டாயம் வசூலிக்கப்படும்.
எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?
இந்திய ரூபாயை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களாக இருந்தால் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் போது ரூ. 25 ஆயிரம் வரை கையில் ரொக்கமாக வைத்துக்கொள்ளலாம். சுங்க விதிகளின்படி, கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடுமையான அபராதம் விதிக்கப்படும். கடுமையான வழக்குகளில் கைது செய்யப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications