சென்னையில் மூதாட்டி துண்டு துண்டாக வெட்டி கொலை! ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய தம்பதி! தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னையில் மூதாட்டி ஒருவர் நகை, பணத்திற்காக கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தம்பதியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பரபரப்பு தகவல்களை அளித்தனர். மேலும் இவர்கள் மீது போலீஸாரின் சந்தேக பார்வை எப்படி திரும்பியது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி விஜயா. இவர் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 17ஆம் தேதி வேலைக்கு சென்ற விஜயா, வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மகள் லோகநாயகி எங்கெல்லாமோ தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் லோகநாயகி புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விஜயாவை தேடி வந்தனர். இந்த நிலையில் விஜயாவின் வீட்டிற்கு அருகே வசித்து வந்த பார்த்திபன் (32) என்பவரை விசாரணைக்காக போலீஸார் கடந்த 23 ஆம் தேதி அழைத்துள்ளனர். எனினும் பார்த்திபன், தனது மனைவி சங்கீதாவுடன் (28) தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து விருதுநகரில் பதுங்கி இருந்த இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி விஜயாவை இருவரும் சேர்ந்து நகைக்காக கொன்று அவரது சடலத்தை மூட்டையாக கட்டி அடையாற்றில் வீசியது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் பார்த்திபன் அளித்த வாக்குமூலத்தில் நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். நான் பி.டெக் முடித்துள்ளேன். எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. எனக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மாதம் ரூ 4500 வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். பொருளாதார பிரச்சினையால் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்தினேன்.
ஒரு கட்டத்தில் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மேலும் தடுமாறினேன். மூதாட்டி விஜயா எப்போதும் தங்க நகைகளை அணிந்திருப்பார். அவருடைய சுருக்குப் பையிலும் ஆயிரக்கணக்கான பணம், இருக்கும். எனவே அவரை கொலை செய்து, நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினோம்.
சம்பவத்தன்று விஜயா வீட்டிற்கு நானும் மனைவியும் சென்று மூதாட்டியிடம் இருந்த சுருக்கு பையை பறிக்க முயன்றோம். அப்போது அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அவரை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து கொலை செய்தேன். சடலத்தை எனது வீட்டுக்கு கொண்டு வந்தோம்.
அவர் அணிந்திருந்த தங்க நகை, சுருக்கு பையில் இருந்த ரூ 30 ஆயிரம் பணத்தை எடுத்தேன். அன்று இரவே விஜயாவின் மகள் லோகநாயகியிடம் ஒரு பெரிய சாக்கு பையை என் மனைவி வாங்கி வந்தார். குப்பை கொட்டுவதற்கு என கேட்டதும் அவரும் ஒரு பெரிய பையை கொடுத்தார்.
அதில் மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி சடலத்தை மூட்டையாக கட்டி ஜோன்ஸ் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் வீசிவிட்டோம் என பார்த்திபன் தெரிவித்தார். போலீஸாருக்கு பார்த்திபன் மீது எப்படி சந்தேகம் எழுந்தது என்றால், பார்த்திபனும் சங்கீதாவும் விஜயாவை தேடிய போதிலிருந்தே கூடவே இருந்துள்ளனர்.
இந்த இடத்திற்கு போயிருக்கலாம், அந்த இடத்திற்கு போயிருக்கலாம் என கூடவே சேர்ந்து மற்றவர்களுடன் தேடியுள்ளனர். அது போல் காணவில்லை என விஜயாவின் புகைப்படத்துடன் போஸ்டரையும் அடித்துள்ளனர். எல்லா விஷயத்திலும் இவர்கள் தலையீடும் ஓவர் ஆக்டிங்கும் அதிகமாக இருந்ததால் போலீஸாருக்கு இவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
மேலும் விஜயாவின் செல்போனும் பார்த்திபனின் செல்போனும் ஒரே இடத்தில் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததும் தெரியவந்தது. இதை வைத்துத்தான் போலீஸாரின் சந்தேகம் அவர்கள் மீது திரும்பியது. விஜயாவின் மகள் லோகநாயகியிடம் இவர்கள் கடனாக பணத்தை வாங்கியதும் அவர், கடனை திருப்பி கேட்டதும் தெரியவந்தது. மகளிடம் வாங்கிய கடனை அடைக்க தாயிடம் கொள்ளையில் ஈடுபட்ட போது இவர்கள் கொலையையும் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications