சுனிதா, கல்பனா.. பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக மாறிய 2 பெண்கள்.. தேசிய தேர்தல் களமே மாறுதே!
சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் முன்னிலை வகிப்பது பாஜகவிற்கு இமேஜ் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
எப்போதும் தேர்தல் நேரத்தில்.. பெண்கள் இமேஜ் கட்சிகளுக்கு கைகொடுக்கும் . ஜெயலலிதா அசைக்க முடியாத தலைவராக இருக்க அவருக்கான பெண்கள் ஆதரவு முக்கிய காரணம். மம்தா பானர்ஜிக்கும் இப்போது அதுவே பொருந்தும். பெண்களிடம் நல்ல அபிமானம் பெற்ற ஆண் தலைவர்களுக்கும் தேர்தல் வெற்றிகள் எளிதாக கைகூடும்.

அதுவே பெண்களின் கண்ணீர், கோபம் போன்ற சென்சிடிவ் விஷயங்கள் ஒரு சில கட்சிகளுக்கு எதிராக அப்படியே திரும்பிய வரலாறுகளும் கூட உண்டு. அப்படித்தான் இப்போது 2 பெண்களின் கண்ணீர் பாஜகவை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அடுத்தடுத்த கைது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகளின் தலையீடுகள் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக அடுத்தடுத்து பல்வேறு மாநில முதல்வர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
உதாரணமாக டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர். மதுபானக் கொள்கை விவகாரத்தில் மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். அதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
அதற்கு முன்பாக ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
ஹேமந்த் சோரன், ஜாரக்கண்ட் முக்தி மோர்சா+காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் முதல்வராக பதவி வகித்து வந்தார். இப்படி இருக்கையில் அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டு குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கியது. 7 முறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியும் சோரன் ஆஜராகாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கல்பனா சோரன்: தற்போது ஜார்கண்டில் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் முன்னிலை வகித்து வருகிறார். கட்சி கூட்டங்கள் தொடங்கி தேர்தல் திட்டங்கள் வரை பலவற்றையும் கல்பனா சோரன் முன்னின்று நடத்தி வருகிறார். அங்கே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் புதிய முகமாக கல்பனா சோரன் மாறி உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக பிரச்சார கூட்டம் ஒன்றில் கல்பனா சோரன் கலந்து கொண்டார். அதில் அடிக்கடி கண்ணீர் விட்டபடி உடைந்து அழுது பேசினார் கல்பனா சோரன். நமது மாநிலத்தை பாஜக அழிக்க பார்க்கிறது. ஹேமந்த் சோரன் வேறு ஆள் இல்லை. அவர் உங்கள் மகன்.உங்கள் மகன் ஹேமந்த் சோரன் கடந்த 4 ஆண்டுகளில் அரசுக்கு செய்த பணிகள் 20 ஆண்டுகளில் எந்த அரசாலும் செய்ய முடியாத பணிகள். ஹேமந்த் சோரன் திட்டங்கள் மற்றும் பணிகளால் ஜார்க்கண்ட் வளர்ச்சியடைந்து வருவதால், ஹேமந்த் சோரனை தடுக்க பாஜகவினர் சதிகளை தீட்டத் தொடங்கினர். ஒரு பழங்குடியினரின் மகன் எப்படி மாநிலத்தை மேம்படுத்துகிறார் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
கனவை மட்டுமே விற்று நிஜத்தில் எதையும் செய்யாத அரசுதான் மத்திய அரசு. ஹேமந்த் சோரன் மக்களுக்கு நல்லது செய்வதை பார்த்து பாஜகவால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரை சிறையில் அடைத்து உள்ளனர் . ஒரு பழங்குடியின் மகன் வெற்றிபெற்றுவிட கூடாது என்பதற்காக அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
சுனிதா கெஜ்ரிவால்: இவருடன் தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் இணைந்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இதில்தான் கெஜ்ரிவால் கைதாகி உள்ளார்.
இதை எதிர்த்து டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்திலும் சுனிதா கெஜ்ரிவால் - கல்பனா சோரன் 2 பேரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதோடு இவர்களுடன் சோனியா காந்தியும் உடன் இருந்தார். பெண்கள் இடையே வலுவான மெசேஜ் ஒன்றை கொடுக்கும் விதமாக இவர்கள் ஒன்றாக அமர்ந்து இருந்தனர். பாஜகவிற்கு இதுதான் சிக்கலாக மாறி உள்ளது.
கண்ணீர்: இந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் , கெஜ்ரிவால் மனைவி சுனிதா இருவரும் கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் இப்படி கதறி அழுவது செண்டிமெண்ட் ரீதியாக தேசிய அரசியலில் பாஜகவிற்கு எதிராக திரும்ப தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications