"சென்னையில் 50% கம்மி விலையில் வீடு வாங்கலாம்.." சீக்ரெட் பார்முலாவை சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருக்கும். ஆனால், அந்தக் கனவை அடைவது அவ்வளவு ஈஸி இல்லை.. ஒரு வேகத்தில் போய் இஎம்ஐ வலையில் மாட்டிக் கொண்டால் அதில் இருந்து மீள்வதே கடினமாகிவிடும். இதற்கிடையே இந்தியாவின் ரியல் எஸ்டேட் மார்கெட்டை விளக்கிய பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், இதில் குறைந்த விலையில் வீடு வாங்க இருக்கும் வழியையும் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் வேலைக்குப் போக ஆரம்பித்தாலேயே கிட்டத்தட்ட அனைத்து மிடில் கிளாஸ் மக்களும் எதிர்கொள்ளும் கேள்வி சொந்தமாக வீடு வாங்கியாச்சா என்பது தான். நமது நாட்டில் வீடு என்பது இருக்க ஒரு இடம் என்பதைத் தாண்டி எமோஷ்னலாகவும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதனாலேயே பலரும் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வீடு வாங்குகிறார்கள்.

வீடு வாங்குவது
ஆனால், வீட்டுக்கடன் என்பது மிகப் பெரிய மாய வலை.. அதில் சிக்கிக்கொண்டால் பெரிய கஷ்டம் என்கிறார்கள் வல்லுநர்கள். அப்போ எப்படித் தான் குறைந்த ரேட்டில் வீடு வாங்கலாம் என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், வீட்டை எப்படி கம்மி விலைக்கு வாங்கலாம் என்பது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
சீக்ரெட் பார்முலா
இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், "புதிய பில்டர்களிடம் போனால் நிச்சயம் வீட்டின் விலையே அதிகமாகவே சொல்வார்கள். உங்களுக்கு வீடு வாங்க வேண்டும்.. இருப்பதற்கு வீடு வாங்க வேண்டும் என்றால் ஏரியாவில் இருக்கும் எல்லா வங்கி மேலாளர்களிடமும் போன் செய்யுங்கள். கடன் கட்ட முடியாமல் நிறைய வீடுகள் இருக்கும். அதை நீங்கள் பாதி விலையிலேயே வாங்கிக் கொள்ளலாம்.
கடன் கட்ட முடியாத வீடா. அதை வாங்கலாமா என்றெல்லாம் நினைக்கக்கூடாது. இதில் சென்டிமெண்ட் எல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது. சென்டிமெண்ட் எல்லாம் பார்த்தால் ரூ.70 லட்சத்திற்கு வீட்டை வாங்கிவிட்டு, அதை ரூ.15,000க்கு வாடகை வீட்டிலா இருக்க வேண்டும். ரூ.70 லட்சத்தை வட்டிக்கு விட்டாலே அதை விட அதிகமாக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வரும். 15 ஆண்டுகளில் போட்ட பணத்தையே எடுத்துவிடுவேன்.
ரியல் எஸ்டேட் சந்தை
அதேபோல நாம் இன்னொரு விஷயத்தை நோட் செய்திருப்போம். சென்னையிலேயே ஏகப்பட்ட பழைய வீடுகள் விற்காமல் இருக்கும். ஆனால், புதிய வீடுகள் மளமளவென புக் ஆகிக் கொண்டே இருக்கும். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். அவர் இது தொடர்பாகக் கூறுகையில், "பொதுவாக வீட்டை நடுவில் இடைத்தரகர்கள் பணம் கொடுத்து புக் செய்துவிடுவார்கள்.
அதாவது இடைத்தரகர்கள் ரூ.2 கோடி மதிப்புள்ள 10 வீடுகளைத் தலா ரூ.1 கோடி என்ற வீதத்தில் ரூ.10 கோடிக்கு புக் செய்துவிடுவார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்டும் பணிகள் மளமளவென நடக்கும். அதன் பிறகு முதலீட்டாளர்கள் கைக்குப் போகும். வீடுகளை மக்கள் வாங்கும் வரை முதலீட்டாளர்கள் அதை ஹோல்ட் செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கணிசமான லாபம் கிடைக்கும்.. அதாவது வீடு பில்டர், இடைத்தரகர், முதலீட்டாளர்கள் அதன் பிறகே மக்களுக்கு வரும்.. இவ்வளவு கை மாறி தான் வரும்.
லாபம் எப்படி
ரியல் எஸ்டேட்டை கடன் பத்திரத்தை போல நினைக்க வேண்டும். குறைந்தபட்சம் கடன் பத்திரத்தில் கிடைக்கும் வட்டி இதில் வருமானமாகக் கிடைக்க வேண்டும். சரி வீட்டின் மதிப்பு அதிகரிக்கிறது என வைத்துக் கொண்டால் கடன் பத்திரத்தில் கிடைக்கும் வட்டியை விட கம்மியாக 2% கிடைத்தாலும் ஓகே! அதாவது வருமானமாக 6% முதல் 7% வரை வர வேண்டும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications