பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? ரிசர்வ் வங்கி வழிமுறைகள் வெளியீடு
சென்னை: பல ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு எப்படி எடுப்பது என தெரியாமல் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயன்படுத்தாத வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை திரும்ப பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி வழிமுறைகளை பொதுமக்களுக்காக வெளியிட்டிருக்கிறது. வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புத் தொகைகளைச் சரிபார்க்க https://udgam.rbi.org.in என்ற இணையதளத்தை நாட வேண்டும்.
பலர் வங்கி கணக்கை திறந்திருப்பார்கள். அதில் பணத்தையும் போட்டிருப்பார்கள்.ஆனால் பணத்தை தேவைப்படும் போது எடுத்துவிட்டு, ஒரு கட்டத்தில் அந்த அக்கவுண்ட்டை அப்படியே விட்டிருப்பார்கள். இப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு எப்படி எடுப்பது என தெரியாமல் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள்.

2025-ம் ஆண்டில், வங்கிகளில் கோரப்படாமல் கிடக்கும் தொகை ரூ.1.84 லட்சம் கோடி என மத்திய அரசு தெரிவித்திருந்தது
தற்போது அந்த பழைய வங்கிக் கணக்குகளில் எடுக்கபடாமல் இருக்கும் பணத்தை எடுத்துவிட்டு, வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம். உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வங்கிக் கணக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கிறது என்றால் இதை பாருங்கள். அப்படி பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத அந்த வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட ஒரு தொகை எடுக்கப்படாமல் விடு்பட்டிருந்தால், அந்த பணம் ரிசர்வ் வங்கியின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் வரவு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை திரும்பவும் கோரும் உரிமை உங்களுக்கு இப்போதும் இருக்கிறது.
அதற்கு நீங்கள் முதலில், உங்களுடைய அல்லது உங்கள் குடும்பதினர் பயன்படுத்திய வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புத் தொகைகளைச் சரிபார்க்க https://udgam.rbi.org.in என்ற இணையதளம் சென்று உங்கள் விவரங்களை அளித்து உறுதி செய்ய வேண்டும்.
பிறகு, கணக்கு வைத்திருந்த வங்கியின் எந்தக் கிளைக்கும் சென்று வங்கிக் கணக்கு வைத்திருந்தவரின் கேஒய்சியை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் கணக்கு தொடங்கிய கிளைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதேநேரம் வங்கிக்கு செல்லும் போது ஆதார் அல்லது பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்கள் எடுத்து செல்ல வேண்டும்.
கேஒய்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த வங்கிக் கணக்காக இருந்தால், அந்தத் தொகை வட்டியுடன் திரும்ப ஒப்படைக்கப்பார்கள். தேவையில்லை எனில், அந்த வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடலாம். பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புகளைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் இந்த மாதம் 31-ந்தேதி வரை நடக்கிறது.












Click it and Unblock the Notifications