இரவு 12 மணி.. லேசான புன்முறுவல்-அம்மாவின் முகத்தில் இறுக்கமில்லை.. திருமாவளவன் நெகிழ்ச்சி.. பின்னணி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் தனது தாய் பெரியம்மாள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவராக இருப்பவர் தொல் திருமாவளவன். இவர் சிதம்பரம் தொகுதி எம்பியாகவும் உள்ளார்.
தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் திருமாவளவன் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து கட்சி பணி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அக்.2 அன்று தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி! விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு!
சமூக நல்லிணக்க பேரணி
இந்நிலையில் தான் ‛‛அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி தினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த பேரணியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் சனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
தாயை சந்தித்த திருமாவளவன்
இதற்கு மத்தியில் தான் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாய் பெரியம்மாளுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு உணர்ச்சிப்பூர்வமாக ஒரு பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் 4 போட்டோக்களை பதிவேற்றி உள்ளார். முதல் போட்டோவில் திருமாவளவன் தனது தாய் பெரியம்மாளின் கையை பிடித்து கொண்டபடி உள்ளார். 2வது, 3வது போட்டோவில் இருவரும் கையில் அட்டையுடன் பேப்பரில் எழுத்து பயிற்சி செய்கின்றனர். 4வது போட்டோவில் திருமாவளவனின் தாய் பெரியம்மாள் என்ற பெயர் மட்டும் உள்ளது.
இறுக்கமில்லை லேசான புன்முறுவல்
இந்த போட்டோவுடன் கூடிய பதிவில் திருமாவளவன், ‛‛நள்ளிரவு 12 மணிக்கு மேல் அம்மாவை சந்தித்தேன். அம்மா முகத்தில் வழக்கமான இறுக்கமில்லை. இலேசான புன்முறுவல். கையெழுத்து போடக் கற்றுக்கொண்டதைக் கூறும்போதுதான் அந்த களிப்பு. ஆனாலும்.. இனிமே கத்துகிட்டு என்ன பண்ணப்போறேன்? அம்மாவின் முனகலில் ‛காலங்கடந்த ஆசை' எனும் விரக்தியின் வலி'' என குறிப்பிட்டுள்ளார்.
காரணம் என்ன?
அதாவது தாய்க்கு கையெழுத்து போட சொல்லி கொடுத்தது தொடர்பான படங்களையும், அவரது கையெழுத்தையும் தான் போட்டோக்களாக பதிவிட்டு தாய் பெரியம்மாளின் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் திருமாவளவன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமானவர்கள் வரவேற்று, பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.