டிரோன்களை தடுக்கவே முடியாதா? அஜித் தோவலை திடீரென சந்தித்த மோடி.. வருகிறது "லேசர், ஜிபிஎஸ் ஸ்பாய்லர்"
சென்னை: ஜம்மு காஷ்மீரில் டிரோன் தாக்குதல்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் ஆலோசனை நடத்தினார்.
ஜம்முவில் நடத்தப்பட்டு வரும் டிரோன் தாக்குதல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதன்பின் மறுநாள் இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானும், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திட்டங்கள்
இந்த நிலையில் திடீரென நடத்தப்படும் டிரோன் அட்டாக்குகளை தடுக்கும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் திட்டங்களை வகுத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

தெரியவில்லை
இப்படி திடீரென டிரோன் தாக்குதல்களை கையில் எடுத்துள்ளனர். இதை செய்தது பாக். ராணுவமா, தீவிரவாதிகளா என்று உறுதியாக தெரியவில்லை. முதல்முறை இப்படி நடக்கிறது.. ஆனால் இதுதான் கடைசி முறையாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்று இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரோன் டெக்னாலஜி எதிரிகளிடம் இருப்பது கண்டிப்பாக பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

விவாதம்
இந்த டிரோன்களை தடுக்கவே முடியாதா என்று பிரதமர் மோடி கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். டிரோன்கள் என்பது தாழ்வாக பறக்க கூடியது. 40 கிமீ தூரத்தில் இருந்து கூட டிரோன்களை ரிமோட் மூலம் இயக்க முடியும், மொட்டை மாடியில் இருந்து கூட எளிதாக டிரோன்களை ஏவ முடியும். தாழ்வாக பறப்பதால் ரேடாரில் சிக்காது. சத்தமே இன்றி வந்து தாக்கிவிட்டு செல்லும் திறன் கொண்டது.

டிரோன்
இப்படிப்பட்ட டிரோன்களை தடுக்க உலகம் முழுக்க பொதுவான தொழில்நுட்பம் எதுவும் இல்லை. டிரோன்களை தடுக்க இதைத்தான் செய்ய வேண்டும் என்று தனிப்பட்ட தொழில்நுட்பம் எதுவும் இல்லை. இதனால் தாழ்வாக பறக்கும் சாதனங்கள், யூஏவி போன்றவற்றை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை, உயரமான கோபுரங்களை அமைக்கும் திட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளது.

லேசர்
அதோடு லேசர் தொழில்நுட்பத்தை ஜம்மு காஷ்மீரில் களமிறக்க முடிவு செய்துள்ளனர். டிரோன்களை கண்டவுடன் லேசர் மூலம் தாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். சவுதி அரேபியாவில் அரசர் குடும்பத்திற்கு இந்த லேசர் பாதுகாப்பு உள்ளது. இன்னொரு பக்கம் GPS Spoofers அல்லது spoiler எனப்படும் கருவிகளை களமிறக்க உள்ளனர். குண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்கள், ரிமோட் உதவியுடன் இயக்கப்பட்டு நேரடியாக ஜம்மு விமானப்படைத்தளத்தில் தாக்கி உள்ளது. ஜிபிஎஸ் உதவியுடன் துல்லியமாக விமானப்படை தளம் நோக்கி இந்த டிரோன் வந்து தாக்குதல் நடத்தி உள்ளது.

ஜிபிஎஸ் சிக்னல்
இதனால் ஜிபிஎஸ் சிக்னலை குழப்பும் வகையில் ஜிஎஸ்பி ஸ்பாய்லர்களை களமிறக்க முடிவு செய்துள்ளனர். டிரோன்கள் இதனால் எங்கே குண்டு போடுவது என்று தெரியாமல் குழம்பும். இது போக அகச்சிவப்பு கேமரா மூலம் இரவு நேரங்களில் கண்காணிப்பு, டிரோன்களை பிடிக்கும் வலைகள், திருப்பி தாக்கும் அட்டாக் டிரோன்களை களமிறக்கும் முடிவிலும் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளது.

ஆலோசனை
இது தொடர்பாகவே நேற்று ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. டிஆர்டிஓ உதவியுடன் இதற்கான புதிய தொழில்நுட்பங்களை விரைந்து கொண்டு வரும் முடிவில் உள்ளனர். இன்னொரு பக்கம் டிரோன் தாக்குதல்கள் எப்போது வேண்டுமானாலும் எல்லையில் நடக்கலாம் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications