ரிஸ்க் எடுத்த விஜயகாந்த்! ஃபிளாப்பில் இருந்து எஸ்கேப்பான பூந்தோட்ட காவல்காரன்! சாதித்தது எப்படி?
சென்னை: நடிகர் விஜயகாந்துக்கு பூந்தோட்ட காவல்காரன் வெற்றிப் படமாக அமைந்தது எப்படி தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்ற பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிறைய பேர் இசையால், பாடலால் படம் ஓடுமா, தோல்வியடையுமா? எனக் கேட்டிருந்தனர். ஒரு சம்பவம்.

பூந்தோட்டக்காவல்காரன் படத்தை செந்தில் நாதனுக்காக ராவுத்தரும், விஜய்காந்தும் தயாரிக்கத் திட்டமிட்டனர். அப்படி செந்தில் நாதன் படமும் இயக்கி படம் தயாராகி விட்டது. புதிய இயக்குனர் என்பதால் பூந்தோட்டக்காவல்காரன் படத்தை வாங்க யாரும் தைரியம் காட்டவில்லை. அன்று திருச்சி வினியோகஸ்தராக இருந்த அடைக்கலராஜ் எம்.பி மட்டும் அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் படம் முதல் காப்பி ரீரெக்கார்டிங்குக்காக இளையராஜாவிடம் போகிறது.
இளையராஜா படத்தைப் பார்க்கும் போது அவரோடு இயக்குனர் கோகுலகிருஷ்ணாவும் படத்தை பார்த்திருக்கிறார். படம் சரியில்லை எனப் பார்த்த அனைவரும் முடிவு செய்து விட்டனர். பின் தான் விஜய்காந்த் படம் தோல்வியடையும் அதுவும் சொந்தத் தயாரிப்பு என்கிற வதந்தி ஆனந்தக்கூத்தாடி கிளப்பப்பட்டது. கோகுலகிருஷ்ணா வேலை மெனக்கிட்டு வினியோகஸ்தர் அடைக்கலராஜுக்கு போன் போட்டு படம் சரியில்லை என்றும் புது இயக்குனர் சொதப்பி விட்டார் எனப் போட்டுக் கொடுக்க அடைக்கலராஜ் ராவுத்தரிடம் கொடுத்த அட்வான்சை திரும்ப வாங்கி இருக்கிறார்.
அடைக்கலராஜ் அட்வான்ஸ் தொகை திருப்பி வாங்கிய விஷயம் இன்டஸ்ட்ரி முழுக்க பரவியது. ராவுத்தரோ இது வரை செலவாக்கியது போதும் படத்தை நிறுத்தி விடலாம் என நிறுத்தி விடுகிறார். விஜயகாந்தோ சிவந்த கண்களோடு ராஜாவிடம் போய் "ஏன் கண்ட ஆட்களையெல்லாம் வைத்துக் கொண்டு படம் பார்க்கிறீர்கள்" எனக் கோபித்துக் கொண்டு ரீரெக்கார்டிங்கையும் வேண்டாம் என வைக்கிறார்.
படம் எடுத்த வரை மூட்டை கட்டி வைக்கப்பட்டது. செந்தில்நாதனுக்கே தன் படைப்பு மேல் சந்தேகம் வருவது போல் விபூதி அடித்து விட்டனர் திரைத்துறை வாசிகள். அவரும் மனம் உளைந்து விஜயகாந்த்தை சந்திக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பிறகு திரும்பவும் தன் குருநாதர் எஸ்.ஏ.சியிடம் போய் அசிஸ்டண்ட்டாக சேர்ந்து கொள்கிறார்.
ராஜா இதையெல்லாம் அறிந்த பின்னர் ஒரு நாள் ராவுத்தரிடம் பிரிண்ட்டை கொண்டு வரச்சொல்கிறார். படம் இப்போது தயாராகி ராஜாவின் ராஜாங்க இசையோடு அழகாக இருக்கிறது. ஆனாலும் யாரும் வாங்க வரவில்லை. வினியோகஸ்தர்களுக்காக முதல் ஷோ திரையிடப்படுகிறது. செந்தில் நாதன் மட்டும் ஆஜராகிறார். விஜய்காந்தும், ராவுத்தரும் ராஜாவின் இசை வேலை முடிந்தும் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் வரவில்லை.
படம் திரையிடப்படுகிறது. இடைவேளையில் செந்தில்நாதனை யாரும் கண்டு கொள்ளவேயில்லை. அடைக்கலராஜ் ஆட்களும் வந்திருந்தனர். படம் முடிந்தது வினியோகஸ்தர்கள் வெளியே வந்து "எங்கேய்யா செந்தில்நாதன்?" எனக் கேட்க கூனி குறுகி டென்ஷனில் வருகிறார் செந்தில். "பின்னிட்டய்யா நீ... செமப்படம்" என அங்கேயே படத்தை வாங்க போட்டாப்போட்டி. ஒரே ஏரியாவுக்கு நாலு பேர் கேட்கின்றனர்.
தகவல் கேட்டு ராவுத்தர், விஜய்காந்த் இருவரும் நம்பவேயில்லை. அப்படி என்னய்யா இருக்குன்னு அவர்களும் தனி ஷோ போட்டு பார்க்கின்றனர். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட். விஜய்காந்த் செந்தில்நாதனை அழைத்து கட்டிப்பிடித்து ஒரு கார் வாங்கிக் கொடுத்து தமிழ்நாடு முழுக்க மனைவியோடு போய் நம்ம படத்தை மக்கள் ரசிப்பதை பார்த்துட்டு வாங்கன்னு பணத்தையும் தருகிறார்.
அப்படி செந்தில்நாதன் முதல் படம் பெரும் வெற்றி பெறுகிறது. கோகுல கிருஷ்ணா பார்த்த முதல் படத்துக்கும், வினியோகஸ்தர்கள் பார்த்த இரண்டாவது படத்துக்கும் என்ன வேறுபாடு?. சாட்சாத் அந்த ராஜாவின் இசையும், பாடல்களுமே... ஒரு படத்தை வெற்றிக்கு கொண்டு போகும் சக்கரம் தான் இசை.... அது அழகாக இருந்தால் வெற்றிக்கு அருகே போய் விடலாம் என்பது உண்மை தானே...
(ராமராஜன், ஆர்.சுந்தர்ராஜன், மோகன், ராஜ்கிரண் போன்ற பூந்தோட்டங்களுக்கு உண்மையான காவல்காரன் அன்றைய ராஜா தான்...) இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications