மூட்டை நிறைய தங்கம், வைரம்.. பல லட்சம் பணம்.. சென்னை தொழில் அதிபருக்கு காத்திருந்த ட்விஸ்ட்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபரின் வீட்டிற்குள் புகுந்து 150 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்க பணம் மற்றும் அங்கிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரங்களையும் திருடி சென்றுவிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் பின்புறம் உள்ள லேக் ஏரியா 5-வது தெருவில் திருட்டு நடந்தது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்றைக்கு என்ன தான் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும்,கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் வீட்டில் ஆள் இல்லை என்றால், நோட்டமிட்டு திருடுவது நடக்கிறது. முகமூடி அணிந்தும், பைக்கில் வாகன பதிவு எண்ணை மாற்றியும் ஆள் இல்லாத நேரங்களில் கொள்ளையடிக்கிறார்கள். அடிக்கடி ஏரியாக்களில் சுற்றும் திருடர்கள், யார் வீட்டில் எப்போது வெளியே போகிறார்கள்.. யாரிடம் என்ன இருக்கிறது என்று தெளிவாக நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுகிறார்கள். திருடிய பின்னர் பல மாதங்கள் தலைமறைவாகும் திருடர்கள், நீண்ட நாளைக்கு பிறகே குறிப்பிட்ட பகுதிகளுக்கு வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி பார்ப்போம்...

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் பின்புறம் லேக் ஏரியா 5-வது தெரு அமைந்துள்ளது. இங்கு தொழிலதிபர் அபுபக்கர் ஆருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை சென்னையில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் அதிபர் அபுபக்கர் ஆருண் கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதி, வீட்டை பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான கீழக்கரைக்கு குடும்பத்தோடு சென்றார். பின்னர், துபாய்க்கும் போனார். நேற்று இவர் வீடு திரும்பி வந்துள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தது. வீட்டில் மர்ம கொள்ளையர்கள் புகுந்து தங்க நகை, வைர நகைகள், ரொக்க பணம், விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை மூட்டைகட்டி அள்ளி சென்றிருப்பதை கண்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் அபுபக்கர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். நுங்கம்பாக்கம் போலீசாரிடம் தொழில் அதிபர் அளித்த புகாரில், 150 பவுன் தங்கம் - வைர நகைகளும், ரூ.20 லட்சம் ரொக்க பணமும், விலை உயர்ந்த 4 கைக்கடிகாரங்களும் திருட்டு போய் இருப்பதாக கூறியிருந்தார். சம்பவம் நடந்த வீட்டில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அருண் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
சம்பவம் நடந்த வீட்டை சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்களும் சென்று கொள்ளையர்களின் கை ரேகையை பதிவு செய்தார்கள். அப்போது கொள்ளையர்கள் வீட்டின் பால்கனி வழியாக ஏறி சென்று வீட்டின் உள்பக்கம் செல்லும் கதவை உடைத்து நுழைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகை மற்றும் பொருட்களோடு தப்பி செல்லும்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வெளியே சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடு பூட்டி கிடப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் போலீசார் . தொழில் அதிபர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் நுங்கம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் இப்போது சிசிடிவிகேமரா வைப்பது நல்லது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள் மற்றும் வீட்டின் பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளில் யாராவது நுழைந்தால் சிசிடிவி கேமரா மூலம் மொபைலில் கண்காணிக்க முடியும். அதேபோல் எங்கு இருந்தாலும் வெளிநபர்கள் யாராவது வந்தால் அதை அலார்ட் செய்யும் அளவிற்கு மேம்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தினால் திருட்டு குறித்து எச்சரிக்கை செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications