மதுரவாயலில் மாஸ் சம்பவம்.. தரைமட்டமாக்கிய ஜேசிபி.. சென்னையில் 53 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
சென்னை: சென்னை மதுரவாயல் அருகே குளத்தை மூடி, கடைகள் மற்றும் வீடுகள் கட்டி பயன்படுத்தி வந்ததை கண்ட பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் ரூ.53 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் சிலர் சாலைகள் மற்றும் பாதைகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து புகாரின் பேரில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். அந்த வகையில், மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான குளம் இருக்கிறது. அந்த குளத்தை சிலர் மூடி உள்ளனர். கடைகள் மற்றும் வீடுகள் கட்டி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்

இதை பார்த்த பொதுமக்கள், குளத்தை மூடி வீடுகட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிலங்களை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டார். இதையடுத்த மாவட்ட வருவாய் அலுவலரின் அறிவுறுத்தலின்படி அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்த வருவாய்த்துறையினர், அதனை அகற்ற முடிவு செய்தனர்
இதையடுத்து நேற்று காலை பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில், மண்டல துணை தாசில்தார் யுகேந்தர், வருவாய் ஆய்வாளர் ஜெயசுதா மற்றும் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினார்கள். இதன் மூலம் ரூ.53 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 40 சென்ட் அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர்.
மேலும் அந்த இடத்தில், 'இது அரசுக்கு சொந்தமான இடம்' என போர்டும் வைக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக மதுரவாயல் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.இதனால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது.
இதனிடையே சென்னை நெற்குன்றம் பகுதியில் மாரி நாராயணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலுக்கு சொந்தமான 950 சதுர அடி நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி இருந்தார்கள்.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை அடிப்படையாக கொண்டு, சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் நித்யா தலைமையில் நேற்று அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 3 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தார்கள். மேலும் அது கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைத்தார்கள். மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications