நடுங்கவைத்த கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது எப்படி? வெளியான புது தகவல்
சென்னை: கவரப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி 13 ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையிலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாததற்கு முக்கிய காரணம், எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய சரக்கு ரயில் காலியான பெட்டிகளை கொண்டதாக இருந்ததே என தகவல் வெளியாகியுள்ளது. காலி பெட்டிகளை கொண்ட ரயில் என்பதால், மோதியதால் ஏற்பட்ட மொத்த அதிர்வையும் சரக்கு ரயில் உள்வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதிர வைத்த கோர விபத்து: மைசூரில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 8.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 75 கி.மீ வேகத்தில் வந்த ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே கிடந்தன.

இந்த விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ரயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்டவாளத்தின் குறுக்கே சிதறிக் கிடக்கும் ரயில் பெட்டிகளை ராட்சத கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
லூப் லைனில் சென்ற ரயில்: ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வருவதற்காக பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அருகே வந்தபோது, மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு, லூப் லைனில் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது எப்படி?: சென்னைக்கு அருகே நடந்த இந்த கோர ரயில் விபத்து அனைவரையும் அதிர வைத்தது. பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி 13 ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையிலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாததற்கு முக்கிய காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய சரக்கு ரயில் காலியான பெட்டிகளை கொண்டதாக இருந்ததே, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாததற்கு முக்கிய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. காலி பெட்டிகளை கொண்ட ரயில் என்பதால், அதிலும், நின்று கொண்டிருந்த ரயில் என்பதல் மோதியதால் ஏற்பட்ட மொத்த அதிர்வையும் சரக்கு ரயில் உள்வாங்கிக் கொண்டதாகவும், அதனால் தான் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications