சுற்றுலா புறப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்த நிறுவனம்.. கம்பெனி ரூல்ஸை வைத்தே ஆப்படித்த நபர்
சென்னை: தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் 2 வாரம் விடுமுறை எடுத்து சுற்றுலா புறப்பட தயாரானார். ஆனால் சுற்றுலா புறப்படுவதற்கு பதிலாக அவரை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து அந்த ஊழியர் கம்பெனி வகுத்து வைத்துள்ள ரூல்ஸை சுட்டிக்காட்டி 2 வார விடுமுறைக்கான சம்பளத்தை பெற்றதோடு, பணி நீக்கத்தை ரத்து செய்துள்ளோம். மீண்டும் பணியில் சேரும்படி மெயில் அனுப்ப வைத்த சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன செய்தார் அந்த ஊழியர்? வாங்க பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேரும்போது விதிமுறை, கொள்கைகளை நம்மிடம் சொல்வார்கள். இல்லாவிட்டால் விதிமுறை - கொள்கை சார்ந்த ஆவணங்களில் கையெழுத்து வாங்கி கொள்வார்கள்.
ஆனால் பலரும் அதனை சரியாக படித்து புரிந்து வைத்து கொள்வது இல்லை. வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அதனை பெரிதாக எடுத்து கொள்வது இல்லை.

ஆனால் உண்மையிலேயே பணிக்கு சேரும்போது நிறுவனத்தின் ரூல்ஸை படித்து மனதில் ஏற்றி வைத்து கொள்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால் 2 வாரம் சுற்றுலா செல்ல விடுமுறை எடுத்து புறப்பட்ட ஊழியரை நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது. இதையடுத்து அந்த ஊழியர் பணியில் சேரும்போது நிறுவனம் வழங்கிய கையேட்டில் உள்ள ரூல்ஸை எடுத்து காட்டு தனக்கான உரிமையை நிலைநாட்டிய விவரம் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக Bright Side இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛தனியார் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் 2 வாரம் சுற்றுலா செல்ல விரும்பினார். இதற்காக விடுமுறை எடுக்கவும் நினைத்தார்.. இதையடுத்து நிறுவனத்தில் முன்கூட்டியே விடுமுறையை கேட்டார். நிறுவனமும் அவருக்கு விடுமுறை வழங்கியது. இதையடுத்து அந்த ஊழியர் விமான டிக்கெட், ஹோட்டல் அறை உள்ளிட்டவற்றை புக் செய்தார். இது அவரது கடந்த 3 ஆண்டு கால கனவாகும்.
இதனால் அவர் மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால் சுற்றுலா புறப்படுவதற்கு முந்தைய நாள் அவரது தலையில் இடியை இறக்கினார் எச்ஆர். ‛உங்களை பணியில் இருந்து நீக்குகிறோம்' என்று கூறினார். எந்த வார்னிங்கும் தரவில்லை. எந்த விளக்கமும் கேட்கவில்லை. பணியில் இருந்து நீக்குவதாக கூறியுள்ளார். இதனால் அந்த ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.
இருப்பினும் 2 வாரம் விடுமுறை காலத்துக்கான சம்பளம்(Paid Time Off or PTO) தரும்படி கோரினார். அதற்கு எச்ஆர் சிரித்தபடி, இது ‛பேட் டைம்' என்று கூறி சம்பளம் வழங்க முடியாது என்பதை வெளிப்படுத்தினார். அப்போது அந்த ஊழியர் நிறுவனத்தின் கொள்கை சார்ந்த குறிப்பை எச்ஆருக்கு அனுப்பினார்.
அதாவது அந்த நிறுவனத்தை பொறுத்தவரை பணி நீக்கம் செய்யப்படும் நபர் முன்கூட்டியே விடுமுறை கேட்டு அவருக்கு போதிய விடுமுறை இருப்பின் சம்பளத்துடன் கூடிய பணி நாளாக கருதி விடுமுறை நாள் மட்டுமின்றி மீதமுள்ள பயன்படுத்தாத விடுமுறை நாளுக்கான ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை சுட்டிக்காட்டி பணி நீக்கப்பட்ட ஊழியர் தனக்கான 2 வார விடுப்பு சம்பளத்தை கோரினார். மேலும் நிறுவனத்தின் மெயில் ஐடியுடன் சேர்ந்து தொழிலாளர் வாரியத்திலும் புகாரளித்தார். இப்படி பாயிண்ட்டை பிடித்ததால் அந்த நிறுவனம் உறைந்து போனது. இதையடுத்து 2 நாட்களில் நிறுவனம் அவருக்கான சம்பளத்தை வழங்கியது.
அதுமட்டுமின்றி இன்னொரு இ-மெயிலும் அவருக்கு அனுப்பப்பட்டது. அதாவது பணி நீக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதாகவும், மீண்டும் பணிக்கு வரும்படியும் நிறுவனம் கூறியது. ஆனால் அந்த ஊழியர் தனது விடுமுறை காலத்தில் இன்னொரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒவ்வொரு ஊழியர்களும் தங்களின் நிறுவன கொள்கைகளை கவனமுடன் படித்து அறிந்து கொண்டு தங்களின் உரிமைகளை கேட்டு பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications