கோயில் நிலத்தை ஆக்கிரமித்தால் குற்றவியல் நடவடிக்கை.. அறநிலையத்துறை அதிரடி- யாரெல்லாம் புகார் தரலாம்?
சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் தேவையான ஆவணங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் எனக் கோயில் நிர்வாகிகளுக்கு அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன.
இருப்பினும், இந்த கோயில்களின் நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.

குற்றவியல் நடவடிக்கை
அதேபோல பல இடங்களில் உரிய வாடகை செலுத்தாமலும் எவ்வித முறையான ஒப்பந்தங்கள் இல்லாமலும் பலர் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆணையர் கடிதம்
இந்நிலையில் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆணையர் மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என இல்லை என்றும் அனைத்து சார்நிலை அலுவலர்களும் புகார் அளிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்," அந்நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டப்படியான உரிமை இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஆணையரின் எழுத்து மூலமான புகாரின் (Complaint) பேரில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளச் சட்டப்பிரிவு 79 (B) (3)யில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

புகார் அளிக்கலாம்
ஆனால், ஒவ்வொரு நிகழ்விலும் ஆணையர் மட்டுமே புகார் செய்வது என்பது இயலாது என்பதால் 1973 இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்தவொரு நபரும் ஆக்கிரமிப்பாளர் மீது எழுத்து மூலமான புகாரினை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு அளிக்கும் வகையில் சட்டப்பிரிவு 79 (B) (3)ல் உரியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பார்வைக்குறிப்பு 2ல் காணும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அதன் நகல் பார்வைக்குறிப்பு 3ல் காணும் குறிப்பில் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அறங்காவலர்களுக்கு அறிவுறுத்தல்
எனவே, அந்நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் எதுவுமின்றியும் உரிய வாடகையினை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளத் தொடர்புடைய காவல் நிலையத்தில் முறையாகப் புகார் மனு அளித்திடச் சம்பந்தப்பட்ட அந்நிறுவனங்களின் அறங்காவலர்கள் அல்லது தக்கார் அல்லது செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் மனு அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை சட்டப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களைக் கண்டறிந்து திருக்கோயில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்பு தாரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்பு தாரர்களுக்கெதிராக தனிநபர்களால் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனு மீதான விசாரணைக்குத் தேவையான ஆவணங்களையும், முழுமையான ஒத்துழைப்பையும் காவல்துறைக்கு வழங்கிட வேண்டுமெனத் திருக்கோயில் நிர்வாகிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications