"அதுக்குள்ளயா".. செங்கோட்டையனா.. எடப்பாடியை முந்தும் ஓபிஎஸ்.. புது சிக்கல்.. ஊதித்தள்ள ரெடியான திமுக
நடக்க போகும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற ஆர்வம் எகிறி கொண்டிருக்க, ஓபிஎஸ்ஸோ முந்திக்கொண்டு களத்தில் இறங்கி உள்ளதாக தெரிகிறது.. இது அதிமுகவுக்குள்ளேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார் திருமகன். இதனையடுத்து, இந்த தொகுதி காலியாக இருக்கிறதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தமிழக தேர்தல் அதிகாரி சாஹு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் டைம்
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வந்தநிலையில், தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், அதற்கான பரபரப்புகள் மேலும் கூடிவருகின்றன.

இளங்கோவன்
இந்நிலையில், இன்றைய தினம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை, ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. திமுகதான் போட்டியிட வேண்டும் என்று சொந்த கட்சியிலே அழுத்தங்கள் தரப்பட்டபோதிலும்கூட, அதை பரிசீலிக்காமல், காங்கிரசுக்கு தொகுதியை முதல்வர் ஸ்டாலின் விட்டுக்கொடுத்துள்ளதாகவும், இதையடுத்து, காங்கிரஸ் தரப்பு தொகுதியில் இறங்கி களவேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. இதுஒருபுறமிருக்க, அதிமுக என்ன செய்ய போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ரிஸ்க் எதுக்கு
இதுகுறித்து நாம் அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது, "அதிமுகவுக்கு சின்னம் பிரச்சனையாக இருக்கிறது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜாவுக்கு தொகுதியை விட்டுத்தரலாம்.. ஏனென்றால், நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் உள்ள நிலையில், இந்த சமயத்தில் இடைத்தேர்தல் விஷயத்தில் அதிமுக ரிஸ்க் எடுக்காது.. கொங்குவில் அதிமுகவின் வாக்கு வலுவாக இருந்தபோதிலும்கூட, தனித்தனியாக சின்னத்தில் நிற்பது தேவையா? அல்லது சுயேச்சை சின்னத்தில் நின்று தேர்தலை சந்திதக்கும் விபரீதம் தேவையா? என்று யோசிக்கும்.

ஈரமனசு
அதுமட்டுமல்ல, வழக்கமாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்றாலும், செந்தில்பாலாஜி கொங்கு பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் அவரையும் சமாளிக்க அதிமுக தயாராக வேண்டும்.. இந்த ஒன்றரை வருடத்தில், கொங்கு மண்டலத்துக்குதான் அதிக நலத்திட்டங்களை திமுக அரசு செய்து வருவதாக செந்தில்பாலாஜி சொல்லி வருவதால், அதிமுக இதற்கு மாற்றாக என்ன செய்ய போகிறது? என்பதும் எதிர்பார்ப்புக்குரிய விஷயம்தான்.. தமாகா வேட்பாளரை அதிமுக அறிவித்தாலும், அதற்கான தேர்தல் செலவை ஏற்பது யார்? ஆளுமையை நிரூபிக்க, எடப்பாடி தரப்பே செலவுகளை ஏற்குமா? என்பது அதைவிட எதிர்பார்ப்பாக உள்ளது.

வாசன்
ஒருவேளை ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை என்று அதிமுகவே நேரடியாக போட்டியிட்டால், காங்கிரஸை விட்டுவிட்டு, திமுகவே களமிறங்கி போட்டியிடக்கூடும்.. ஏனென்றால், காங்கிரஸை அதிமுக தோற்கடிக்க நேர்ந்தால், இது ஆளும்கட்சிக்கு கவுரவ பிரச்சனையாகிவிடும்.. ஏற்கனவே திமுக அரசு மீது விமர்சனங்கள் ஆங்காங்கே வெடித்து வரும்நிலையில், அதிமுக இங்கு வெற்றிபெற்று விட்டால், அது தங்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும் என்பதையும் திமுக அறியாமல் இல்லை.. எனவே, அதிமுக போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணிக்கு ஒதுக்குகிறதா? என்பதே இப்போதைக்கு முக்கியம்.

செங்கோட்டையன்
அதனால்தான், கடந்த 2 நாட்களாகவே, அக்கட்சியின் செங்கோட்டையனிடம், எடப்பாடி தரப்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.. கட்சியின் சீனியரான செங்கோட்டையன், கொங்குவை நன்கு அறிந்தவர் என்பதால், அவரது கருத்தையும் எடப்பாடி தரப்பு கேட்டு பெறுவதாக தெரிகிறது.. இன்றும்கூட அந்த ஆலோசனை தொடரும் என்கிறார்கள்.. பெரும்பாலும் தமாகாவையே அதிமுக இறக்கிவிட நினைக்கும்.. அப்படி தமாகா வேட்பாளரை நிறுத்தினால், அது எந்தவகையிலும் அதிமுகவின் செல்வாக்கை பாதிக்காது என்றும் கணக்கு போடும்" என்றனர்.

தலைவலி வந்தாச்சு
இதுஒருபுறமிருக்க, வரும் 23ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்... அநேகமாக, இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்கிறார்கள்.. தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைதி காத்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்க, ஓபிஎஸ் முந்திக்கொண்டு வேலையில் இறங்கி விட்டதாக தெரிகிறது. ஒருவேளை ஓபிஎஸ் தன் தரப்பில் வேட்பாளரை அறிவித்தால், அவர் "அதிமுக"வின் வேட்பாளராகவே கருதப்படுவார்.. இதுவும் எடப்பாடிக்கு சிக்கலையே ஏற்படுத்தும் என தெரிகிறது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications