"அல்டிமேட்" அறிவிப்பு.. உருளும் "சிவப்பு சிக்னல்".. இப்போதைக்கு இந்த திட்டமே கிடையாதாம்.. ரயில்வே நச்
சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.. இதுகுறித்த முக்கிய தகவலை ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் மிக முக்கியமான புறநகர ரயில் வழித்தடமாக தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடம் உள்ளது.. இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 3 பாதைகள் மட்டுமே இருக்கின்றன..
2 ரயில்கள்: இவைகளில் 2 பாதைகளில் புறநகர் எலக்ட்ரிக் ரயில்கள் இயக்கப்படுகின்றன... ஒரு பாதையில் விரைவு ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், 4-வது ரயில் பாதை இங்கு இல்லை.. அதனால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ இயலாத நிலைமை இங்கு உள்ளது..

அதுமட்டுமல்லாமல், வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரலில் இருந்தே இயக்கப்படுவதால், சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதுமே கூட்டம் நிரம்பி தள்ளுகிறது.. இங்கு கூட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தாம்பரத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக, வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.
இடநெருக்கடி: மேலும், சென்டிரலில் இடநெருக்கடியும் நிலவுகிறது.. எனவே, ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், எழும்பூரில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம் வரையில் 4-வது ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்க, மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.. இதற்கான பணிகளும் விரைவில் ஆரம்பமாகிறது.. ஆனால், இந்த 4-வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியானது.
சேப்பாக்கம்: அதாவது, வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் மின்சார ரயில்கள் ஜூலை 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.. இந்த அறிவிப்பை கேட்டதுமே பயணிகள் அதிர்ந்துபோய்விட்டார்கள்.. கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தனர்.. இதற்கு பிறகுதான், அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனையை நடத்தினார்கள்..

திடீர் அறிவிப்பு: தற்போது திடீரென அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.. இதற்கான காரணத்தையும் ரெயில்வே அதிகாரிகள் விளக்கி உள்ளனர். அவர்கள் சொல்லும்போது, "வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லாமல் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை பணியை மேற்கொள்வது ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதை ரத்து செய்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், இதற்கு மாற்றாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்துடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.. இந்த தகவலானது, ரயில் பயணிகளுக்கு நிம்மதியை தந்துவருகிறது.
பயணிகள்: இதனிடையே, சென்னை எழும்பூர் முதல் கடற்கரை ரெயில் நிலையம் வரையிலான 4-வது வழித்தட பணிகளை பயணிகளுக்கு பாதிப்பின்றி எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று புதிய திட்டம் வகுத்து அதை சமர்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications