ஓபிஎஸ் மகனுக்கு மத்தியமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?... தமிழிசை அடடே பதில்
Recommended Video
சென்னை: தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்களை பரிந்துரை செய்வது குறித்து கட்சித் தலைமை தான் முடிவு எடுக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட விழாவில், நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி, நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், இணை-அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்பு இணை-அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தர ராஜன், விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கருத்து சொல்ல விரும்பவில்லை
அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, பற்றி தற்போது நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அது குறித்து அமித்ஷாவும், மோடியும் முடிவெடுப்பார்கள் என்றார். தமிழகத்தில் பாஜக பலம் பெற மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் பிரதிநிதிகள் அதிகரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வல்லரசு நாடு
தமிழகத்தின் மீது பாஜக மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. தமிழகத்திற்கு நிறைய வாய்ப்புகள் வரும். தமிழகத்தில் பாஜக பலம் பெறும். மோடியின் தலைமையில் பதவி ஏற்றுள்ள இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற எடுத்துச் செல்லும். இன்னும் பல மாநிலங்களில் பல வெற்றிகள் பாஜக குவிக்க உள்ளது.

தவறான பிரச்சாரங்கள்
தமிழகம் இன்னும் அதிகம் பலம் பெற இருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் . மேலும் மக்களுக்கு துன்பம் தரக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும், அதை இந்த அரசு ஆதரிக்கப் போவது இல்லை. தவறான பிரச்சாரங்கள்தான் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

பொருத்தமாக இருக்காது
இதற்கிடையே, தமிழகத்துக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும், இது முழுமையான அமைச்சரவை இல்லை என்றும் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சரவையில் இடம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்புவது பொருத்தமாக இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications