இந்தியில் கடிதம் அனுப்பிய மத்திய அமைச்சருக்கு, தமிழில் பதில் எழுதிய திமுக எம்.பி. அப்துல்லா
சென்னை: ரயில்வே இணை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது எனக் கூறியுள்ள ராஜ்யசபா எம்பி புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மத்திய அமைச்சருக்கு தமிழில் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தி அல்லாத பிற மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட மாநிலங்கள் மீது இந்தியை திணிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதிலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மத்திய அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறது.

கடந்த வாரம் துர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தி தின விழா கொண்டாட்டமும் நடைபெற்றது. இதற்கும் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்த நிலையில்தான், ரயில்வே அமைச்சரிடம் இருந்து வந்த கடிதம் இந்தியில் இருப்பதாகவும், தற்போது அவர்களுக்கு புரியும் படி பதில் அளித்து இருப்பதாகவும் திமுவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜ்சயா எம்பி புதுக்கோட்டை எம்.எம் அப்துல்லா, ரயில்வேயில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும் ரயில்களில் அங்கீகரிக்கப்படாத விற்பனையை நிறுத்துவது தொடர்பகவும், ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.. எம்பியின் இந்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பதில் கடிதம் அனுப்பியிருந்துள்ளார். அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டு இருந்ததால், தனக்கு இந்தி தெரியாது என்றும் ஆங்கிலத்தில் தனக்கு கடிதத்தை அனுப்புமாறு பலமுறை கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.
ஆனாலும் மறுபடியும் இந்தியில்தான் கடிதம் வந்து இருப்பதாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்லார். இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்பி புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு கடிதஙக்ளையும் பகிர்ந்து வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரயில்வே இணை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி” பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளர்.

மேலும் ரயில்வேக்கு தமிழில் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வணக்கம்! தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். எனக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதியுள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எனவே அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தமிழக அரசு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 2022 ஆம் அண்டு கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இது தேசிய ஒருமைப்பாட்டை ஊறு விளைவிக்க கூடியது எனக்கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications