10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று பார்த்தேன்.. பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு.. நெகிழ்ந்த சகோதரி!
சென்னை: செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, வெள்ளிப் பதக்கத்துடன் இன்று தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து, அவரது சகோதரி வைஷாலி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
ஃபிடே உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா மோதினார். இதில் இரு கிளாசிக்கல் சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதையடுத்து சாம்பியனை தீர்மானிப்பதற்கான டைபிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. அதில் பிரக்ஞானந்தா போராடி வாய்ப்பை தவற விட்டார். இதன்மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்ற பிரக்ஞானந்தா இன்று தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவை அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள், செஸ் வீரர்கள் உள்ளிட்டோர் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
பிரக்ஞானந்தாவுக்கு மலர்கள் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள தாளங்கள் முழங்க திறந்தவெளி வாகனம் மூலம் ஊர்வலமாக கூட்டிச் செல்லப்பட்டார் பிரக்ஞானந்தா. பின்னர், பிரக்ஞானந்தா தனது குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தான் வென்ற வெள்ளிப்பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்தார்.

உலகக்கோப்பை செஸ் தொடரில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பிரக்ஞானந்தாவிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் கிடைத்த பிரமாண்ட வரவேற்பை பார்த்து அவரது சகோதரி வைஷாலி மகிழ்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "10 ஆண்டுகளுக்கு முன்பு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று விஸ்வநாதன் ஆனந்த் சார் தாயகம் திரும்பிய போது இதுபோன்ற வரவேற்பை நான் பார்த்தேன். தற்போது அதே போன்ற வரவேற்பு பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்துள்ளது. பிரக்ஞானந்தா அனைத்து மக்களிடமும் அன்பை பெறுவதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது." என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications