அவதூறு பேச்சு.. யாரையும் விட மாட்டேன் என சொன்ன திருச்சி எஸ்பி வருண்.. சீமான் கொடுத்த ரியாக்சன்
சென்னை: திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இதில் சம்பந்தப்பட்ட யாரையும் சும்மா விடமாட்டேன் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் கூறிய நிலையில் இதற்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
திருச்சி எஸ்பி வருண் குமாரின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 20க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி எஸ்பி வருண் குமார் "எனக்கு எதிரான போஸ்ட்களை பதிய, தூண்டி விட்ட நபர்களை நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். யாரையும் சும்மா விடமாட்டேன். நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது" என்று போஸ்ட் பதிவிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், இது என் வேலை கிடையாது, எங்க நிர்வாகிகளுக்கும் இது வேலை கிடையாது என்று கூறினார். இது தொடர்பாக சீமான் பேசியதாவது:- என்னை எவ்வளவு காலம் இழிவாக பேசி எழுதுகிறார்கள் தெரியுமா?.. இவர் சொல்லி தான் எழுதுகிறார்கள் என்று நான் சொல்ல முடியுமா?.. எங்க அம்மாவை, என் தங்கையை, என் குடும்பத்தினரை இழிவாக பேசி எழுதுகிறார்கள்.
என் தாயையே இப்படி இழிவாக எழுதுகிறார்கள். நான் இதற்கெல்லாம் ஏதும் பதில் சொல்கிறேனா. எல்லாத்தையும் கடந்து சென்றுகொண்டு தான் இருக்கிறேன். எனக்கு இதுவா வேலை.. சொல்லுங்க.. கொள்கைக்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். நான் எந்த பின்புலத்தில் இருந்து வந்து, எவ்வளவு பெரிய கனவோடு வேலை செய்துகொண்டு இருக்கிறேன். இந்த மண்ணில் எந்த போராட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சொல்லுங்க பார்க்கலாம்.
திருச்சி எஸ்பி வருண்குமார் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விட தூண்டியதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக பேசியதாக கூறப்படுவது குறித்து கேள்விக்கு பதில் அளித்த சீமான், "இது எல்லாம் சும்மா.. ஒரு தவறான பேக் ஐடியை உருவாக்கி திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். என் பெயரில்
எங்க பிள்ளைகள் இப்படி செய்யவில்லை. என் பிள்ளைகள் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். அப்படி முன்பு செய்தவர்களை எல்லாம் உடனே கட்சியை விட்டு நீக்கியிருக்கிறேன். சாட்டை துரைமுருகனையே 2 முறை கட்சியை விட்டு நீக்கியவன் நான். இது என் வேலை அல்ல. இது சும்மா யாராவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன நடந்தது?: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும், அவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப தேவையில்லை எனக் கூறி கோர்ட்டு அவரை விடுவித்தது.
இதையடுத்து சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அதே சமயம் அவரின் போனில் இருந்து சீமான் பேசியதாக பல ஆடியோக்கள் வெளியாகின. இதனையடுத்து தமது செல்போனில் இருந்துதான் திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
அத்துடன், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார். சில நாம் தமிழர் கட்சியினர் வருண் குமார் குடும்பம் பற்றியும் மோசமாக பேசினர். இதையடுத்துதான், திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது.
அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் பதிவில் கூறுகையில், "எனக்கு எதிரான போஸ்ட்களை பதிய, தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன், என்று திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications