காலேஜ் படிக்கும்போது புல்லட் பைக்.. ஸ்டாண்ட் போட உதவியாளர்.. எடப்பாடி பகிர்ந்த ருசிகர சம்பவம்!
சென்னை : தன்னால் ஸ்டாண்ட் போட முடியாததால் கல்லூரிக்கு புல்லட் பைக்கில் செல்லும்போது உதவிக்கு உதவியாளர் வைத்துக்கொண்டதாக எடப்பாடி பழனிசாமி ருசிகர நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் ஏற்பாடு செய்த ட்விட்டர் ஸ்பேசஸ் உரையாடலில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பல்வேறு ருசிகர நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

ட்விட்டர் ஸ்பேஸ்
அதிமுகவில் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வந்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, சமீபத்தில் வந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் ஈபிஎஸ். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில், டிவிட்டர் ஸ்பேசஸ் மூலம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

படிப்படியாக உயர்ந்து
டிவிட்டர் ஸ்பேஸில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். நான் ஒரு விவசாயி. எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். அதிமுக தொண்டனாக சிலுவம்பாளையம் கிளை கழக செயலாளராக அரசியல் பயணத்தை தொடங்கினேன். பின்னர் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அளவில் பொறுப்பை வகித்தேன். அரசியல் ரீதியாக பல தடைகளை சந்தித்திருந்தாலும் படிப்படியாக உயர்ந்து இன்று தொண்டர்களால் பொதுச் செயலாளராக உயர்ந்திருக்கிறேன்.

உழைப்பும் விசுவாசமும்
உழைப்பும், விசுவாசமும் இருந்ததால் அதிமுகவில் பதவிகள் கிடைக்கும். உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உழைப்பும் விசுவாசமும் இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம். இது இரண்டின் காரணமாகவும், இறைவன் அருளாலும் இன்று நான் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிருக்கிறேன். இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அரசியல் வாழ்க்கையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவு, சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவங்கள் மறக்க முடியாது எனவும் ஈபிஎஸ் பேசினார்.

புல்லட் பைக்கிற்கு உதவியாளர்
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தனக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்த இருசக்கர வாகனம் ராயல் என்ஃபீல்டு புல்லட் என்றும், கல்லூரி படித்த காலத்தில் தந்தையிடம் புல்லட் பைக் வாங்கித் தருமாறு கேட்டதாகவும், அதற்கு அவர், புல்லட் வண்டியை உன்னால் தாங்கிப் பிடிக்கக்கூட முடியாது என்று கூறியதாகவும், அப்படியும் அடம்பிடித்து வாங்கியதாகவும் தெரிவித்தார். புல்லட் வாங்கித் தந்த பிறகு தன்னால் ஸ்டாண்ட் போட முடியாததால் கல்லூரிக்கு புல்லட் பைக்கில் செல்லும்போது மூன்று மாதங்களுக்கு உதவிக்கு உதவியாளர் வைத்துக்கொண்டதாகவும், எடப்பாடி பழனிசாமி ருசிகர நிகழ்வுகளை இந்த ட்விட்டர் ஸ்பேஸில் பகிர்ந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications