என் தொகுதிக்கு பாஜக எம்.எல்.ஏ கிடைக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன்: விரதம் இருக்கும் பாஜக நிர்வாகி!
சென்னை: தனது தொகுதிக்கு பாஜக எம்.எல்.ஏ கிடைக்கும் வரை செருப்பே அணிய மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார் பாஜக நிர்வாகி ஒருவர். அவரைச் சந்தித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய கூட்டணியை கட்டி எழுப்ப முயன்று வருகிறது பாஜக. இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுக்க தொகுதி வாரியாக என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும், வரும் 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்றும் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பேசி வருகின்றனர். 2026ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம், கோவிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்து வருகிறார் அண்ணாமலை.
இந்நிலையில், பாஜகவில் திருத்தணி ஒன்றியத் தலைவராக இருப்பவர் வீரபிரம்மா. இவர், திருத்தணி சட்டசபை தொகுதிக்கு பாஜக எம்.எல்.ஏ கிடைக்கும் வரை தனது காலில் செருப்பே அணிய மாட்டேன் என சபதம் எடுத்து விரதம் இருந்து வருகிறார். திருத்தணியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வீரபிரம்மாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் தமிழக பாஜக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், காலணி அணிய மாட்டேன் என்று விரதம் பூண்டிருக்கும் திருத்தணி ஒன்றியத் தலைவர், சகோதரர் வீரபிரம்மா அவர்களை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சகோதரர் வீரபிரம்மா போன்ற தன்னலமற்ற தொண்டர்களால்தான், தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக தமிழக பாஜக விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்திக் கொண்டிருப்பது, வீரபிரம்மா போன்ற பாஜகவை சேர்ந்த சகோதர சகோதரிகள் தான்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications