தொடரும் விஜய் வேட்டை.. 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.. லிஸ்டில் ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். விஜய் தினசரி பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சி மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து கட்டி வந்து கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் அதிகாரிகளின் செயல்பாடு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.

திமுகவின் தோல்விக்கு அதிகாரிகளின் செயல்பாடும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதனால் தான் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகள் நியமனத்தில் கறார் காட்டி வருகிறது. திமுகவுக்கு ஆதரவாக இருந்ததாக கூறி உதயச்சந்திரன், அமுதா போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தனர். அந்த வரிசையில் இன்று மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, முன்னாள் துணை முதல்வரின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியம் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த டி.என்.வெங்கடேஷ்கைத்தறித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பி.சங்கர் வேளாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இருந்த லதா, கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விடுப்பில் இருந்த காயத்ரி கிருஷ்ணன் சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதல் நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பி. முருகேஷ், வேளாண்மைத்துறை இயக்குநராக கே.வி.முரளிதரன், கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications